To search this blog

Thursday, July 1, 2021

Our Pranams to Shri U.Ve. Koil Kanthadai Chandamarutham Kanthadaiyandan @ Yoga Narasimhan Swami

 ஸ்ரீ:

ஸ்ரீமதே  ராமானுஜாய நம :

ஸ்ரீ ஸ்ரீநிவாஸ மஹாகுரவே நம : 

ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின், அடிப்படையே குருபரம்பரை தான். நம் ஒவ்வொரு செயலும் மங்களம் பெறச் செய்வது, ஆசார்ய ஸம்பந்தம் மட்டுமே. ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யபரம்பரை ஸ்ரீமந்நாராயணனிடமிருந்து தொடங்குகிறது

Sri Vaishnava Sampradhayam places great emphasis on following the path shown by Acharyan.  Our  Sampradhayam is proud of the rich lineage of greatest of Acharyas who have guided us towards salvation.  One can easily discern from the  Great ‘Thaniyan’ of Swami Koorathazhwaan that we observe daily - “Lakshminatha samarambaam, Nathayamuna madhyamam – Asmath Achaarya paryanthaam, vanthe Guru parambaram”.   Following the sampradhaya steps, our dasa thirunamam is ‘Srinivasa dhasan’

நாம் பள்ளிநாட்களில் தமிழ் புத்தகத்தில் 'பரமார்த்த குரு' கதை என்பதை படித்து இருப்போம். அது நல்ல சுவையான ஹாஸ்யமாக உள்ளது என கூட ரசித்து இருக்கலாம் !! அதிவிவேக குருவுக்கு மட்டி, மடையன், பேதை, மிலேச்சன், மூடன் என்ற ஐந்து சீடர்கள். இவர்களுக்கு ஏற்படும் அனுபவங்களையே இந்நூல் விவரிக்கின்றது,  என்பது மேலோட்டமாக உணர்த்தப்பட்டது.  ஆனால் அது நம் சம்பிரதாய ஆணிவேரை பற்றிய நமது மனஓட்டத்தை மாற்ற எடுக்கப்பட்ட ஓர் முயற்சி !!

நமது ஸ்ரீவைஷ்ணவ ஆசார்ய பரம்பரை ஸ்ரீமந்நாராயணனிடமிருந்து தொடங்குகிறது; பிராட்டியார், சேனை முதலியார், ஸ்வாமி நம்மாழ்வார் என்னும் வரிசையில் நாதமுனிகள் யோகதசையில் வகுளாபரணருக்குச் சீடரானார். ரஹஸ்யார்த்தங்களை தங்கள் சிஷ்யர்களுக்கு உபதேசிக்கு முன்பு அந்த சிஷ்யர்கள், தங்கள் க்ருபைக்குப் பாத்ரமானவர்களா என்று பரிசீலித்து, தங்கள் மனம் நோகாதவண்ணம் , அதே சமயம், தங்கள் மனம் உகக்குமாறு தங்களைப் பின்பற்றுவார்கள் என்று உறுதி செய்து கொண்ட பிறகே உபதேசம் செய்வார்கள். இது ஓராண் வழி ஆசார்யர் சிஷ்யர் என வாழையடி வாழையாக வந்த மரபு. 

நம் சம்பிரதாய செம்மல் யதிகட் இறைவன்   ஸ்ரீ பாஷ்யகாரர் அவதரித்து, ஸம்ஸாரிகளிடம் கருணை கொண்டு, அந்த சிஷ்யர்கள் ஸம்ஸார பந்தத்திலிருந்து விடுபடவேண்டும் என்கிற வாத்ஸல்யத்துடன், அவர்களைத் திருத்தி, உபதேசங்கள் செய்யலானார். அவர் நமது சத்சம்ப்ரதாய விஷயங்கள், அவற்றில் ஆசையுடையவர் அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என பெரு முயற்சி கொண்டார்.

இணையம், புத்தகங்கள், சமூக வலைத்தளங்கள் என எத்தனை இருந்தாலும், நம்மை எம்பெருமானிடத்திலே இட்டுச்செல்ல வல்லவர் நம் ஆசார்யர் மட்டுமே ! எம்பெருமான் தன்னிச்சையான ஸ்வதந்த்ரன், பெருங்கருணை காட்டுபவனும் அவனே, ஆகிலும் சேதனர் கர்மங்களுக்கேற்பப் பலன் தருபவனும் ஆகிறான்.  ஆகவே, இவ்விடத்தில்தான் ஓர் ஆசார்யரின் தேவை உணரப்படுகிறது, உணர்த்தப் படுகிறது. எம்பெருமான் , சேதனர் பொருட்டான தன் இடையறாத நல்லெண்ணத்தினால், சேதனர் உய்ய பல வாய்ப்பு வழிகளை ஏற்படுத்தி, ஒரு சதாசார்யனை அடைவித்து, அவ்வாசார்யர் மூலமாக ஐஹிக மோகங்களிலிருந்து விடுவித்து தன்னையும் தன் கருணையையுமே பற்றி உஜ்ஜீவனம் அடையச் செய்கிறான். 

நம் ஸ்ரீவைணவ சம்பிரதாயத்தின் அடிப்படையே - ஆசார்யர்கள்தான்.  பெரிய பெருமாள்; ஸ்ரீரங்க நாச்சியார், சேனை முதல்வர், நம்மாழ்வார், நாதமுனிகள், உய்யக்கொண்டார், மணக்கால் நம்பிகள், ஆளவந்தார், பெரிய நம்பி, எம்பெருமானார் இராமானுசர், கூரத்தாழ்வான், முதலியாண்டான், எம்பார், பட்டர், நஞ்சீயர், நம்பிள்ளை, பிள்ளை லோகாச்சார், திருவாய்மொழிப்பிள்ளை, பெரிய ஜீயர் எனும் நம் மணவாள மாமுனிகள், வானமாமலை ஜீயர் சுவாமி,  தொட்டையங்காரப்பை சுவாமி, சண்டமாருதம் சுவாமி எனும் பெரிய சுவாமி தொட்டையாச்சர் என எங்கள் ஆச்சார்யர் குலம் நீள்கிறது.  


சுவாமி முதலியாண்டான் திருவம்சத்தில் கந்தாடைநாயனுக்கு 1.2.1543ல் ஸ்வாமி தொட்டையாச்சார்யார் - தேவராஜகுரு என்கிற தோழப்பரப்பை என திருவவதாரம் செய்தார். சில நூறாண்டுகள்  முன்பு நம்  ஸ்வாமி தொட்டாச்சார்யார்  அக்காரக்கனியாக (இனிப்புச் சுவையுடைய பழம் போன்ற) போற்றப்படும் ஸ்ரீ யோகநரசிம்மருக்குப் பூஜைகள் செய்துவந்தார். பெருமாளிடம் பக்தி கொண்ட அவர் ஆண்டுதோறும் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவத்திற்குச் சென்று பெருமாளைத் தரிசிப்பது வழக்கம். ஒரு முறை அவரால்  பிரம்மோற்சவத்திற்குச் செல்ல இயலவில்லை. மூன்றாம் நாள் கருட சேவை உற்சவத்தன்று ஸ்வாமி தொட்டாச்சார்யார் சோளசிம்மபுரம் என்ற தற்போதைய சோளிங்கரில் இருந்தவாறே  'ஸ்ரீ தேவராஜ  பஞ்சகம்' எனும்  ஐந்து ஸ்லோகங்களைப் பாடினார். இதே நேரத்தில் காஞ்சியில் வரதராஜப் பெருமாள் கருட வாகனரூபமாகத் திருவீதி உலா செல்வதற்காகக் கோயில் வாயிலுக்கு வந்தார். சோளிங்கரில் இந்த ஐந்து சுலோகங்களைப் பாடி முடிக்கவும், காஞ்சியில் கோயில் வாயிற் கதவு மூடிக்கொள்ளவும் சரியாக இருந்தது. மூடிய கதவுகளுக்குப் பின்னால் கருட சேவையில் இருந்த பெருமாள் அப்படியே சோளசிம்மபுரத்துக்கு  எழுந்தருளி தொட்டாச்சார்யாருக்குக் காட்சி கொடுத்தார். இன்றும் இது  **ஸ்வாமி தொட்டாச்சார்யார் சேவை** என்று காஞ்சியில் வழங்கப்படுகிறது. சோளிங்கபுரத்தில் காட்சி அளித்த பெருமாள், தக்கான் குளக்கரையில் கருட சேவையிலேயே கோவில் கொண்டுள்ளார்.  அத்தகைய சிறப்பு வாய்ந்த திருவம்சத்திலே அவதரித்தவர் நம் ஆசார்யர்.   

சுவாமி வேதாந்தாச்சார் அருளிய சததூழனிக்கு சண்டமாருதம் என்ற வியாக்கியானம் அருளிச்செய்தார்.  'சண்டமாருதம்' என்றால் புயல் காற்றில் கூட அணையாத விளக்கு என்று பொருள்.  நம் சுவாமி அப்பய்ய தீக்ஷிதர் என்ற சிவாத்வவைதியை  சோழசிம்மபுரம் திருதேரடி மண்டபத்தில் 7 நாட்கள் வாதப்போர் செய்து வென்றவர்.



இவ்வளவு சிறப்பு  வாய்ந்த பரம்பரையில் நமது சிஷ்யர்களை திருத்திப் பணிகொண்டு அற்புத காலக்ஷேபங்கள் செய்து வந்த நம் உ.வே. கோயில் கந்தாடை சண்டமாருதம் பெரியப்பங்கார் சுவாமி 2007ல் பரமபதம் ஏகினார். பெரியப்பங்கார் ஸ்வாமிக்கு பிறகு அவரது திருக்குமாரர் ஸ்ரீ கோயில் கந்தாடை சண்ட  மாருதம் ஸ்ரீ சிங்கராச்சார் சுவாமி வர்த்தமான ஆசார்யர்  ஆக நம்மை வழி நடத்தி வந்தார். நம் சுவாமி பரம ஞானி ... பரம சௌலப்யர் ... சிஷ்யர் தம் இல்லங்களுக்கே வந்து இன்வார்த்தைகளுடன் எப்போதும் ஆசீர்வதித்தவர். தம் முன்னோர் போன்று கடிகை தடங்குன்றின் மிசையிருந்த அக்காரக்கனி எம்பெருமானுக்கு அற்புதமாக கைங்கர்யங்கள் புரிந்து வந்தவர்.    நமக்கு பேரிடியாக 23.5.2021 அன்று அதிகாலை @ 12.15 am  அளவில் நம் ஆசார்யர் எம்பெருமான் திருவடியை அடைந்து ஸ்ரீமன் நாரணனுக்கு நித்ய கைங்கர்யங்கள் செய்ய நம்மை விட்டு ஏகினார்.




ஸ்வாமியின் மறைவு  ஸ்ரீவைணவ சமுதாயத்திற்கு பேரிழப்பு .. .. .. நம்மை திருத்தி பணிகொண்டு எம்பெருமானிடம் கைங்கர்யங்கள் செய்துவைத்த நம் ஆசார்யன் ஸ்வாமி கொடிய நோயினால் வைகுந்தம் ஏகினார்.  திருநாட்டுக்குப் புறப்படுகிற ஸ்ரீவைஷ்ணவர்களை பரமபதவாசிகள், நித்யஸூரிகள் வரவேற்பராம்.. .. இதையே -  'சேதனனுடைய  இழப்பு  ஈஸ்வரனுக்கு லாபம்' என  ஸ்ரீவசனபூஷணத்தில்  கூறப்பட்டுள்ளதாம்.  எம்பெருமானே உபாயமும் உபேயமும் என்று ஏற்கும் சேதனனுக்கு  சதாச்சார்ய அபிமானமே என்றென்றும்  உத்தாரகம்.  பரம சௌலப்யராய் நமக்கு நம் குடிசைகளுக்கு வந்து நம்மை திருத்தி பணிகொண்ட ஆசார்யன் இன்று நம்மிடையே இல்லை என்பதை மனம் இன்னமும் ஏற்கவில்லை. 




               Num  Acarya Swami had visited the homes of most of the sishyas making  us gleeful and fortunate. On the evening of  10.2.2021 it was Kuthirai vahana purappadu  during the special Brahmothsavam for Sri Parthasarathi Perumal.    The day was fulfilling for us as our Acaryar  ~ Cholasimhapuram Doddayachaaryar (Sri U. Ve. Kovil Kanthadai Chandamarutham Singarachaar Swamy) was present at Thiruvallikkeni divyadesam and blessed us at our kudisai  too.    

நமக்கு நற்செய்தி :    பிலவ வருஷம் ஆனி திருமூலம் அன்று (25.06.2021) சிஷ்யர்களை (ஸ்ரீநிவாச தாஸர்களை) அனுக்ரஹிக்க வர்த்தமான ஸ்வாமியாக, மஹாசார்யன்(ஸ்ரீ ஸ்வாமி தொட்டையாச்சார்) வழிவந்த சிங்கராச்சார் ஸ்வாமியின் ஜேஷ்ட குமாரர் ஸ்ரீமான் உபய வேதாந்த கோயில் கந்தாடை சண்டமாருதம் கந்தாடையாண்டான் (எ) யோகந்ருசிம்மன் ஸ்வாமி (Thiru KKC Yogesh Swami) எழுந்தருளியுள்ளார்.  ஆசார்யன் திருவடிகளில் தாள் பணிந்து எம்பெருமானை பிரார்த்திக்கின்றோம்.


ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !

நம் ஆச்சார்யன் திருவடிகளே சரணம் !!

ஸ்ரீவைஷ்ணவனுக்கு உய்ய ஒரே வழி ~ எம்பெருமானிடம் சரணாகதி அடைந்துதிருவடிகளில் பிரபத்தி செய்வதே.  ஸ்ரீவைகுண்டத்து எம்பெருமானிடம் நம்மை சேர்விப்பவர் நம் ஆசார்யரே ***  

~adiyen Srinivasa dhasan [dhasan at the feet of Lord Srinivasa through our Acaryar]
Mamandur veeravalli Srinivasan Sampathkumar                                         
1st July 2021.

2 comments:

  1. Very well said swamy.. acharyan thiruvadigale saranam 🙏🏽🙏🏽🙏🏽

    ReplyDelete
  2. ஆசார்யன் திருவடிகளில் தாள் பணிந்து எம்பெருமானை பிரார்த்திக்கின்றோம்.acharyan thiruvadigale saranam. 🙏🙏🙏

    ReplyDelete