To search this blog

Saturday, July 24, 2021

Swami Aalavanthar sarrumurai 2021 - "Aa muthalvan ivan" !!

இன்று (24.7.2021) ஆடி  மாத உத்திராட நக்ஷத்திரம். சுப நாள். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு சீரிய நாள். ஆச்சார்யன் ஆளவந்தார் சாற்றுமுறை**   இன்று நம் சம்பிரதாய ஸ்தாபகர் -   ஓராண் வழி ஆச்சார்யர்களில் பிரபலர் ஸ்வாமி  ஆளவந்தாரின் சாற்றுமுறை.  ஸ்ரீமந்நாதமுனிகளின் திருப்பேரனாரும், விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்திலும் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்திலும் சிறந்த வித்வானுமான ஆளவந்தார், நமக்கு அளித்த அற்புத காவியம் "ஸ்தோத்ர ரத்னம்" - நம் பூர்வாசார்யர்கள் அருளிய ஸ்தோத்ர க்ரந்தங்களில் நமக்குக் கிடைத்துள்ள  பழமையான க்ரந்தம் இதுவே. .. ..    இன்று  திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் ஜ்யேஷ்டாபிஷேகமும் கூட.

 


சோழர்  குலம்  (Chola dynasty) என்பது  பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் முக்கிய வீர மன்னர் பரம்பரை.  நெற்பயிர்கள் அதிகமாக விளைந்த நாடு  எனவே 'சோழ வளநாடு சோறுடைத்து’  என்பது பழமொழி.  சோழ அரச பரம்பரையில், அருள்மொழிவர்மன் என்கின்ற பேரரசர் இராசகேசரி வர்மன் முதலாம் இராசராச சோழன்   புகழ் பெற்ற மன்னர்.  இவர் இடைக்கால சோழ அரசர்.  இவ்வரசு பரம்பரை :   விசயாலய சோழன்; ஆதித்த சோழன்; பராந்தக சோழன் ; கண்டராதித்தர்; அரிஞ்சய சோழன்; சுந்தர சோழன்; ஆதித்த கரிகாலன்; உத்தம சோழன்; இராசராச சோழன் (மாமல்லன்); இராசேந்திர சோழன்..

                                           மதுரையும், ஈழமும் வெற்றி கொண்ட  கோப்பரகேசரி வர்மன் முதலாம் பராந்தக சோழன் (கி.பி 907-953) ஆதித்த சோழனின் மகனாவான். இவர் இயற்பெயர் வீர நாராயணன். களப்பிரரை முறியடித்து கிபி 575 இல் ஏற்படுத்தப்பட்ட பாண்டிய அரசு இவன் காலத்தில் 915 இல் முறியடிக்கப்பட்டது .  பல ஆண்டுகள் இடம் பெற்ற இப்போரில் இலங்கை மன்னன் 5ம் காசியப்பன்  பாண்டியனுக்கு ஆதரவாக போரிட்டான் .முடிவில் பராந்தகன் மதுரையை கைக்கொண்டான்.  போர் முடிவில் பாண்டி மன்னன் இலங்கை தப்பினான்.  இவ்வரசன்  தன் தந்தை கட்டாது விட்ட பல கோயில்களை கட்டினான். 

விஜயாலயச் சோழனின் பேரனான முதலாம் பராந்தகச் சோழன் சோழப் பேரரசுக்கு அஸ்திவாரம் அமைத்தவன். தில்லைச் சிற்றம்பலத்துக்குப் பொன்கூரை வேய்ந்து வரலாற்றுப் புகழ் பெற்றவனும் முதலாம் பராந்தகச் சோழன் தான். சோழசிகாமணி, சூரசிகாமணி முதலிய பெயர்களோடு விளங்கிய இவன், வீர நாராயணன் என்னும் பெயரையும் பெற்றிருந்தான்.  1011 - 1037 ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட இந்த ஏரி, 16 கிலோ மீட்டர் நீளமும் 4 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. தொடக்கத்தில் 74 மதகுகளும் வாய்க்கால்களும் இருந்தன. இப்போது 28 வாய்க்கால்கள் மட்டுமே உள்ளன. 1445 கன அடி நீரைத் தேக்கி வைக்கும் திறன் கொண்ட இந்த ஏரியில் இப்போது 935 கன அடி நீரையே தேக்கி வைக்க முடிகிறது. 

அமரர் கல்கி தனது “பொன்னியின் செல்வன்” நாவலின் கதையை, அப்போதைய சோழ சாம்ராச்சியத்தின் நிலையை, சுவையோடு தொகுத்தளிக்க ‘வந்தியத்தேவன்’ என்கின்ற கதாபாத்திரத்தை கச்சிதமாகத் தேர்ந்தெடுத்தார்.  அக்கதாபாத்திரத்தின் போக்கிலேயே நம்மை காஞ்சி, கடம்பூர், குடந்தை, திருவையாறு, தஞ்சை, திருப்புறம்பியம், பழையாறை, கோடிக்கரை, இலங்கை, மாதோட்டம், அனுராதபுரம், தம்பள்ளை, நாகைப்பட்டினம் என ஒவ்வொரு இடமாகத் தரிசிக்கச் செய்தார்.   இன்றைய தமிழகத்திலே, சித்திரை வெயிலிலும், வற்றிப்போன காவிரிக் கரையோரத்தில் தாமரையும் அல்லியும் மண்டிக் கிடக்கும் இரண்டு மூன்று குளங்கள் மிச்சம் இருக்கின்றனவென்றால், ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், நீர் மேலாண்மைக்குப் பெயர்போன சோழ தேசம் எவ்வாறு இருந்திருக்கும் என்பது ஒரு இனிமையான கற்பனை.    அதன் உண்மை பிரதிபலிப்பு தான் வீராணம் ஏரி !!

 

நாதமுனிகள் இல்லாமலிருந்தால் நமக்கு நாலாயிர திவ்ய பிரபந்தம் கிடைத்திராது. சுவாமி நாதமுனிகள் தான் நாலாயிர திவ்ய பிரபந்தங்களையும் ஒன்று திரட்டியவர். இவருடைய புதல்வன் ஸ்ரீஈஸ்வர முனிகள். அவரது குழந்தைதான் ஆளவந்தாரான யமுனைத்துரைவர் எனப்படும் யாமுனாசாரியர்.    ஆளவந்தார் கிபி-976ம் ஆண்டு ஆடி மாதம் உத்தராடம் கூடிய வெள்ளிக்கிழமையில் வீரநாராயணபுரத்தில் அவதரித்தார்.  நாதமுனிகள் வடநாட்டில் கைங்கரியம் செய்து வந்த பெருமாளின் பெயரான ‘யமுனைத் துறைவன்” என்ற பெயரை அவருக்கு மணக்கால் நம்பி சூட்டினார்.  நம்முடைய தர்சனத்தில்ஆளவந்தார் வித்வத்சார்வபௌமர்.  

ஸ்ரீ நாதமுனிகளும் ஆளவந்தாரும்   ~ அவதார ஸ்தலத்தில் 

நாதமுனிகளும், யாமுனாச்சார்யராகிய ஆளவந்தாரும் பிறந்த திருத்தலம், ‘காட்டு மன்னனார் கோவில்’. வீரநாராயணபுரம் என சோழர்கள் காலத்திலும் தற்கால வீராணம் ஏரி உள்ள இடத்தில உள்ள கோவில் ஆளவந்தாரின் திருத்தலம். இளம்வயதிலேயே வித்வஜ்ஜன கோலாகலர் என்றும் அக்கியாழ்வான் என்றும் புகழ்பெற்ற அறிஞரை வாதத்தில் வென்றார். தனது பன்னிரண்டாம் வயதிலேயே இச்சிறப்பு பெற்றதால் ஆளவந்தார் என புகழ் பெற்றார். 

வாதத்தில் வெற்றி பெற்றதால் கிடைக்கப்பெற்ற  ராஜ்ஜியத்தை நிர்வகித்து வந்த காலத்தில்,  மணக்கால் நம்பி  அவரை மறுபடி சம்பிரதாயப்பணிக்கு திரும்பப்பெற  தினமும் தூதுவளைக் கீரையை கொண்டு வந்து கொடுக்க ஆரம்பித்தார்.  ஒரு சமயத்தில் இதனை நிறுத்தி, ஆளவந்தார் இவரை சந்திக்குமாறு சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொண்டு,   நம்பி அவரிடம் உங்கள் பாட்டனார் தேடிவைத்த நிதி ஒன்று என்னிடம் இருக்கிறது அதை உம்மிடம் அளிப்பதற்கு இங்கே வந்துவிட்டுப் போவதை தடை செய்யாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.  அரண்மனைக்கு சென்று கீதையின் உட்பொருளை அவருக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தவுடன், படிப்படியாக  ஆளவந்தாருக்கு ’பரமனே உபேயம், பரமனே உபாயமும்’ என்பதை புரியவைத்தார். மணக்கால் நம்பிகள் ஆளவந்தாரை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து சென்று ரங்கநாதரைக்காட்டி குலதனம் என்று நம்பிகள் ஒப்படைத்தார். ஆளவந்தாரும் தம் போக வாழ்க்கையை அக்கணமே துறந்து துறவியாகி ஆன்மீகப்பேரரசரானார்.   

ஆளவந்தார் ஒரு சமயம் திருக்கச்சியிலே இளையாழ்வான் ஆன ராமானுஜரை கண்டு     'ஆ முதல்வனிவன்'  என  ஸ்லாகித்து பின்பு பெரிய நம்பியிடம் ராமானுஜரைப் பற்றி கூறினாராம்.  இராமானுஜர் ஆளவந்தாரை சந்திப்பதற்க்காக  திருவரங்கம் அடைந்தபோது, ஆளவந்தார் எம்பெருமான் திருவடியை அடைந்து விட்டார் என்பது வருத்தம் தரும் விஷயமே. ஆளவந்தார் ராமானுஜரின் மானசீக ஆசானும் கூட. ஒவ்வொரு வருடமும் ஆடி  மாதம் உத்திராட நட்சத்திரத்தில் ஆளவந்தாரின் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது.  இவர் அருளிச் செய்த நூல்கள் " எட்டு"   -   இவற்றுள் ஸ்தோத்ர ரத்னம், சித்தித்ரயம், ஸ்ரீகீதார்த்த ஸங்க்ரஹம்,  ஆகமப்ராமாண்யம், சதுஸ்லோகி என்னும் வடமொழி நூல்கள்.   

ஆளவந்தார் தம் பக்தி மிகுதியுடன் எம்பெருமானை ஸ்தோத்திரம் செய்யும் பாசுரம் ஒன்று இங்கே : - அவர்தம் ஸ்தோத்ர ரத்னம் கிரந்தத்தில் இருந்து : - லோக விஷயங்களில் தமக்கு இருக்கும் வெறுப்பை கூறி - அவற்றை தம்மிடம் இருந்து நீக்கி ரக்ஷித்து அருள வேணுமென்னு பிரார்திக்கின்றார்.

ந தேஹம் ந ப்ராணாந்ந ச ஸுகம் அேஷாபிலஷிதம்

ந சாத்மாநம் நாந்யத் கிமபி தவ ேஷத்வ விபவாத் |

பஹிர்பூதம் நாத! க்ஷணமபி ஸஹே யாது ததா

விநாம் தத்ஸத்யம் மதுமதந! விஜ்ஞாபனம்  இதம் || 

எம்பெருமானே ! பரம்பொருளே !  -   உன் விஷயமான கைங்கர்யச் செல்வத்துக்கு வெளிப்பட்டிருக்கும் என்னுடைய தேஹம், ப்ராணன், எல்லோராலும் விரும்பப்படும் சுகங்கள், என்னுடைய ஆத்மா ஆகிய எதுவாக இருந்தாலும் அவற்றை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது; இவை எல்லாம் ஒழியட்டும். மது என்னும் அரக்கனைக் கொன்ற என் ஸ்வாமியே! இது உண்மை; இதுவே என் ப்ரார்த்தனை என்பது ஆளவந்தாரின் அற்புத பிரார்த்தனை.

Last year (2020) there was no purappadu due to Covid and sadly this year 2021 too – there would be no veethi purappadu.  Reminiscing the glorious olden days here are some  photos of Swami Aalavandhar from the purappadu at Thiruvallikkeni on 25.7.2010 taken with Canon Powershot A1100 IS. 

~ adiyen Srinivasa dhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
24.07.2021


PS 1 :
ஸ்தோத்ர ரத்னம் பாசுர விளக்கம் : நன்றி:  divyaprabandham.koyil.org

PS 2 :  horsemen do interest us – Vallaravayan Vanthiyathevan was a famous horseman in Ponniyin selvan – one may not immediately recognize the other horseman at  Godavari in Andhra Pradesh – in case if you would be interested, do read this post :  https://www.sampspeak.in/2021/07/horsemen-lake-and-more.html
















  

No comments:

Post a Comment