To search this blog

Thursday, July 1, 2021

Sri Andal Thirukalyanam - Nachiyar thirumozhi - நம்மை உடையவன் நாராயணன்நம்பி

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார்  பெண்பிள்ளையாய், நந்தவனத்தில், துளசிமலரில் பூமிப்பிராட்டி அம்சமாய் தோன்றிய கோதைப் பிராட்டியின் பக்தி அளவிட முடியாதது. ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த  பிரபந்தங்கள்  'திருப்பாவை & நாச்சியார் திருமொழி". தன் இளமை  தொடங்கியே 'மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்' என உறுதி பூண்ட பிராட்டியின் பக்தி திருப்பாவை, நாச்சியார் திருமொழி நூல்களாக வடிவெடுத்தது. ஆண்டாள் பாடல்கள் அனைத்திலும் ஒருமித்த கருத்து  ஸ்ரீகண்ணனிடம் பக்தியே.  அவரது வார்த்தைகள் இலக்கண நயமும், பக்தி மனமும் கொண்டன.  திருப்பாவை முப்பது பாடல்களும் ‘சங்கத் தமிழ்மாலை’ என்று போற்றப்படுகின்றன.

 


இன்று ஆண்டாள் சிறப்பு பற்றி !  .. .. நமது ஸ்ரீவைஷ்ணவ இல்ல  திருமாளிகைகளில் நடக்கும் திருமணத்தை ஆண்டாள் திருக்கல்யாணம் என்றே சொல்லலாம். கல்யாணத்தில் சீர் பாடல் கட்டத்தில் வாரணமாயிரம் அநுஸந்திப்பது வழக்கம். இப்பாடல்களைக் கேட்கும் புதுமணத் தம்பதிகள் விரைவிலேயே ஞானமும் பக்தியும் நிறைந்த நன்மக்களைப் பெற்று மகிழ்வார்கள்.  முன்பெல்லாம் திருமணத்துக்கு வந்திருக்கும்  அனைத்து  வைதீகர்களும் மணையில் அமர்ந்த்து 'ஆண்டாள் நாச்சியாரின்' - வாரணமாயிரம் பாசுரங்களை இசைப்பர்.  இப்போதைய திருமணங்களில்  வாத்தியார் மற்றும் அவரது உதவி - 'மணமகனும் மணமகளும் தேங்காய் உருட்டி விளையாடும் வைபவத்தில்' சற்று வித்தியாசமான ராகத்தில் 'வாரண  .. .. மாயிரம் ! -  சூழா - வ - லம்   செய்து !  ..  .. .. நாரண நம் பீநடக்கின்னான் இன்னெதிர் .. .. என இசைப்பதை கேட்டு இருக்கலாம் !!



திருப்பாவை ஒரு எளிய நடையில் நமக்கு அளிக்கப்பட உன்னத காவியம்.  ஆண்டாள் திருப்பாவையில் எம்பெருமானை உபாயமாகக் கொண்டாள், அவனுக்குச் செய்யும் தன்னலமற்ற தொண்டே உபேயம் என்று அறிவித்தாள். இந்த நினைவு இருந்தால் எம்பெருமான் தானே பலனைக் கொடுப்பான்.  எம்பெருமான் மீதிருந்த அளவிறந்த காதலாலும் அவன் தன்னை உடனே வந்து கைக்கொள்ளாததாலும் மிகவும் கலக்கத்தை அடைந்தாள்.  ஸ்ரீமன் நாரணனை அடைவதை பற்றி அவர்தம் மிழற்றலே நாச்சியார் திருமொழி பாசுரங்கள்.  “உன்றன்னோடு  உற்றோமேயாவோம்   உனக்கே நாமாட்செய்வோம்“ என்றபடி   நம்மை நோக்குமவனான கண்ணபிரான் தனது செந்தாமரை மலர்போன்ற திருக்கையாலே என்காலைப்பிடித்து அம்மி மிதிப்பிக்கக் கனாக்கண்டேன்  எனும் பாசுரம் - 6ம் திருமொழி 'வாரணமாயிரம்' எனும் பத்து பாசுரங்களில் .. .. . இது அச்மாரோஹணம் எனப்படும் ஒரு முக்கிய நிகழ்ச்சி - அம்மி மிதித்தல் என்கிற நிகழ்வினை.

நமது திருமண முக்கிய நிகழ்வுகளில் 'அம்மி மிதித்தலும் - அருந்ததி பார்த்தலும்' -   அச்மன் என்றால் கல் என்று பொருள். அசைவற்ற ஒரு கல்லின் மீது மணப்பெண்ணை நிற்க வைத்து மணமகன் 'ஆதிஷ்டேமம்.' என்று துவங்கும் மந்திரத்தைச் சொல்வார். "வாழ்க்கை என்பது கரடு முரடாக இருக்கும், சுகம் வரும்போதும் சரி, துக்கம் வரும்போதும் சரி, சோதனைக்குரிய தருணத்திலும் சரி, மனதில் எந்தவித சஞ்சலமும் இன்றி இந்தக் கல் போல ஸ்திரமான, திடமான மன உறுதியை நீ பெற்றிருக்க வேண்டும்" என்று மணமகன், மணப்பெண்ணை நோக்கிச் சொல்வதே இந்த மந்திரத்தின் பொருள்.  அக்காலத்தில் திருமணத்தை அவரவர் இல்லத்திலேயே நடத்தினார்கள். வீடுகளில் பயன்படுத்தக் கூடிய கல்லாக அம்மி இருந்ததால் அதனைப் பயன்படுத்தியிருக்கலாம் அல்லது அச்மன் என்ற வார்த்தை மருவி தமிழில் அம்மி என்று ஆகியிருக்கலாம். ஒரு கருங்கல்லின் மீது நிற்க வைத்து இந்த மந்திரத்தைச் சொல்ல வேண்டும் என்பதே சம்ப்ரதாயம்.

அருந்ததி  வசிஷ்ட மகரிஷியின் பத்னி. அருந்ததி என்ற வார்த்தைக்கு தர்மத்திற்கு விரோதமான காரியத்தை எந்தக் காரணத்தைக் கொண்டும் செய்யாதவள் என்று பொருள். அருந்ததி பார்ப்பது என்கிற நிகழ்வு திருமண நாள் அன்று மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின் செய்யப்பட வேண்டிய ஒன்று !   - அம்மி மிதித்துக்கொண்டே அருந்ததி பார்ப்பது சரியல்ல !!  




நாச்சியார் திருமொழி 40 பாடல்களைக் கொண்ட ஒரு அற்புத காவியம் - கோதைப்பிராட்டி  கண்ணனைத் தனது நாயகனாகக் கொண்டு அவனை அடையத் துடிக்கும்  தவிப்பை எடுத்துக் காட்டுகின்றது. இதோ இங்கே ஆண்டாள் நாச்சியார் தமக்கு ஸ்ரீமன் நாராயணனுடன் நடக்கும் அற்புத திருமணத்தை பற்றி கனவு காணும் பாசுரங்களில் ஒன்று :

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்

நம்மை  உடையவன்  நாராயணன்நம்பி

செம்மையுடைய  திருக்கையால் தாள் பற்றி

அம்மி மிதிக்கக்  கனாக் கண்டேன் தோழீ நான்!! 

ஆண்டாள் கண்ணபிரானோடே இரண்டறக்கலந்தவர்.  இப்பிறவியில் மட்டும் அல்ல, என்றென்றும் அவருக்கே உரித்தானவர்.   இந்த பிறவியிலும் இப்பிறவிக்கும் மேலுள்ள ஏழேழு பிறவிகள் எல்லாவற்றிற்கும் சரண்யனாயிருப்பவனாய் நம்மை உடையவன் ஸகல கல்யாணகுண பரிபூர்ணனான  நாராயணனான கண்ணபிரான்  செவ்விய தனது  திருக்கையினால்  எனது காலைப்பிடித்து அம்மியின்மேல் எடுத்து வைக்க, தனது திருமணம் சிறப்புற நடைபெறுவதை எண்ணி பூரிக்கும் பாசுரம் இது.  

ஸ்ரீ நாலாயிர திவ்யப்ரபந்தம் சந்தை ஆகாதவர்கள் - அடுத்த முறை கல்யாணத்துக்கு செல்லும்போது, மற்ற சத்தங்களை தவிர்த்து, தேங்காய் உருட்டி விளையாடும்போது - 'வாரணமாயிரம்' பாடல்களை கேட்டு இன்புறலாம். 

Kothai piratti indeed succeed in her dreams and married Sriman Narayana.  Sankranthi is  purappadu of newly wed Divya Thampathis - Sri Andal and Sri Parthasarathi grandly occurs  in a special open palanquin [one that has no roof known as kooralam].  Sri Parthasarathi,  is embellished with many dazzling ornaments adorning the Crown [Sigathadai]; Sri Andal in a beautiful sitting posture sitting opposite to Him in the same pallakku.   Here are some photos of the Sankranthi Urgola Uthsava purappadu  many years ago on 15th Jan  2008.

adiyen srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
1st July 2021.











1 comment: