To search this blog

Tuesday, April 30, 2019

Sri Parthasarathi Brahmothsavam ~ Battar mariyathai 2019


ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு 'பெருமாள் கோவில்' என்றாலே 'திருக்கச்சி தேவப்பெருமாள் சன்னதி' தான்!  பிரம்மன் மோக்ஷபுரியில் அஸ்வமேத யாகம் செய்யும் போது யாக குண்டத்தில் இருந்து சங்கு சக்கரங்களுடன் தேவாதி ராஜர் எழுந்து அருளி, அவருக்கு பிரம்மா ஏற்பாடு செய்த உத்சவமே பிரம்மோத்சவம் என ஐதீஹம். 

கோவில்கள் நமது அனுதின வாழ்க்கையில் முக்கிய அம்சம். அனுதினமும் பெருமாளை திவ்யப்ரபந்தம் அனுசந்தித்து சேவிப்பது ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம். பெருமாள் நமக்கெல்லாம் ஸௌலப்யனாக  அருள் மழை பொழிகிறான். பெருமாளை எளிதில் அடைய ஏற்படுதபட்டதுதான் அர்ச்சாவதாரம். "எய்துமவர்க்கு இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிது' என்பது ஆசார்யன் வாக்கு.  ஸ்ரீ வைஷ்ணவ திவ்யதேசங்களில் பெருமாள் திருவீதி  புறப்பாடு என்பது விசேஷம்.

திருக்கச்சி தேவாதிராஜனை போன்றே திருவல்லிக்கேணி எம்பெருமான் ஸ்ரீ பார்த்தசாரதிக்கும் திருமுக மண்டலத்திலே வடுக்கள் உண்டு.  மிக கம்பீரமான பார்த்தசாரதி - அரசன், தன்னிலை கருதாமல் பார்த்தனாகிய அர்ஜுனனுக்கு சாரத்யம் பண்ணி கீதையை உபதேசித்த கீதாச்சார்யன்.  'விற்பெருவிழவு'   = கம்ஸன் தனது வில்லுக்குப் பெரிய பூஜை நடத்துவதாகச் செய்த மஹோத்ஸவம். வேழமும் பாகனும் மல்லர்களும் கஞ்சனும் மடியவே வில்விழவும் முடிந்ததாயிற்று.  வீழ என்றது- நாசமடைய என்றபடி; உபசாரவழக்கு. அப்படி கம்சாசூரர்களை முடித்து பாண்டவர்களுக்கு இராஜ்ஜியம் அளித்த கண்ணனே நம் பார்த்தசாரதி.

திருஅல்லிக்கேணி திவ்யதேசத்தில் - இரண்டு பிரம்மோத்சவம்ங்கள் சிறப்பாக நடக்கின்றன. ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பிரம்மோத்சவம். சித்திரை திருவோணத்தில் (Apr - May) நடக்கிறது. கோவில்களில் நரசிம்ஹர் உக்கிரமாக எழுந்தருளி இருப்பார்; அல்லிக்கேணியிலோ நரசிம்ஹர் அற்புத அழகுடன் சாந்த ஸ்வரூபிஆக, தெள்ளிய சிங்கனாய் - ஸ்ரீ அழகிய சிங்கர் என்ற திரு நாமத்துடன் எழுந்து அருளி உள்ளார். அழகிய சிங்கருக்கு ஆனி  மாதத்திலே  பிரம்மோத்சவம்.

பத்து நாட்கள் பிரம்மோத்சவம்  நடைபெறுகிறது.  பத்து நாட்கள் என்று சொல்லப்பட்டாலும், - உத்சவத்துக்கு இரண்டு நாட்கள் முன்பு 'செல்வர் கொத்து எனும் செல்வர் உற்சவம் புஷ்ப பல்லக்குடன் துவங்குகிறது.  அடுத்த நாள்,  அங்குரார்ப்பணம். 

உத்சவ கால தொடக்க நாளில் 'த்வஜாரோஹணம்'  - கோவில் வாசலில் நுழைவாயிலை கடந்து உள்ள கொடிமரத்தில் கொடி  ஏற்றப்படுகிறது.  முப்பது முக்கோடி தேவர்களையும் வருவித்து, ஆவாஹனம் செய்து - தினமும்  வாகன புறப்பாடு  முன்பே - விஷ்வக்சேனர் சென்று எட்டு திக்கிலும்  தேவதைகளுக்கு  பலி சாதிக்கப்பெற்று உத்சவம் நடக்கிறது.  பல வாஹனங்களில் - தர்மாதி பீடம், கருட வாஹனம், அம்ச வாஹனம், சூர்யா சந்திர ப்ரபைகள், ஹனுமந்த, யானை, குதிரை வாகனங்கள் என ஒவ்வொரு வேளையுமே ஒவ்வொரு சிறப்பு.  திருத்தேர் அதி விசேஷம்.

ஒன்பதாம் நாள் காலை ஆளும் பல்லக்கில், பெருமாள் கணையாழியை தேடும் போர்வை களைதல் முடிந்து, ப்ரணயகலகம் 'மட்டையடி’ என கொண்டாடப்பட்டு, இரவு கண்ணாடி பல்லக்கு புறப்பாடு  முடிந்து, கொடி  இறங்குகிறது. 

பத்தாம் நாள் காலை புறப்பாடு கிடையாது.  ஸ்ரீ பார்த்தசாரதி, ஆண்டாள் ஏக பீடத்தில், திரு தெள்ளியசிங்கர், சக்கரவர்த்தி திருமகன்,  ஸ்ரீ வரதர், ஸ்ரீ வேதவல்லி சமேத மன்னாதர்  ~ மற்றும் அணைத்து ஆழ்வார்கள் ஆசார்யர்கள் எழுந்து அருளப்பெற்று -  த்வாதச ஆராதனம் சிறக்கிறது.  பத்து நாட்கள் வீதிதனிலே - முதலாயிரம், இரண்டாவதாயிரம் (திருமொழி); இயற்பா சேவிக்கப்படுகிறது.  பத்தாம் நாள் - நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி சேவிக்கப்படுகிறது.  

இரவு வெட்டிவேர் தேர் எனும் சிறிய திருத்தேரில் புறப்பாடு நடக்கிறது.  புறப்பாடு முடிய இரவு சுமார் 10.30 மணி ஆகிறது.  ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான் உள்ளே எழுந்தருளி, பட்டர் சப்தாவரணம் நடத்துகிறார். உத்சவ கால விவரணங்கள் நம் முன்னோர்களால்  மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

நள்ளிரவில் - ப்ரம்மோத்சவத்தை காப்பு கட்டிக்கொண்டு சிறப்புற நடத்திய பட்டருக்கு மரியாதை.  திருக்கோவில் திருச்சின்னங்கள், திருக்குடைகள், அத்யாபகர் ஸ்வாமிகள், பரிஜனங்கள் கூட, பட்டரை அவர் தம் திருமாளிகைக்கு  சென்று அங்கே வேத விண்ணப்பத்துடன் இவ்விழா முடிவடைகிறது.

இவ்வருடம், சிறப்புற நடந்தேறிய ப்ரம்மோத்சவத்தின் முடிவில் - 28.4.2019 அன்று நள்ளிரவில் பெரியமுறை மிராசுதாரர் ஸ்ரீ பார்த்தசாரதி பட்டர் சுவாமி மரியாதை வைபவத்தின் போது அடியேன் எடுத்த சில புகைப்படங்கள் இங்கே.

Sri Parthasarathi Brahmothsavam has just concluded.  The Chithirai brahmothsavam is a grand 10 day affair with Emperuman having purappadu in many vahanams including Sesha, Simha, Garuda, Hamsa, Hanumantha, Yaanai, Kuthirai and more .. thiruther (juggernaut) captures the eye of everyone.

The celebrations start from Selvar uthsavam, followed by Ankurarpanam, raising of the flag (dwajarohanam) – vahana purappadu, and lowering (avarohanam) of the flag marking the culmination.  On day 10 happens dwadasa thiruvarathanam and Sapthavarnam during which Thiruvaimozhi is recited.  The rituals associated with the Uthsavam have so beautifully been ingrained by our elders.

After the siriya thiruther [vettiver chapparam] – the Battar who conducts the yagna is returned home with paraphernalia (with temple maryathai including thiruchinnam and kudai].  Here are some photos taken by me at around 1 am on 29.4.2019 during Battar maryathai for Periyamurai Mirasu Sri Parthasarathi Battar.

~ அடியேன் ஸ்ரீனிவாச தாசன். Srinivasan Sampathkumar











No comments:

Post a Comment