To search this blog

Monday, October 16, 2023

Swagatham Krishna - ஸ்வாகதம் கிருஷ்ணா.. சரணாகதம் கிருஷ்ணா..

பொன்மாலை பொழுது !  இன்றைய நாள் சென்று விட்டது.  வாழ்வில் மற்றும் ஓர் நாள் !!  நன்றாக சென்றதா !  வெறுமனே சென்றதா! வீணாக சென்றதா! -  ஆழ்மனசு அறியும்.  கண்ணை மூடி தியானித்தால் கண்ணபெருமான் - எவ்வளவு வீணர்களாக சத்தற்ற விஷயங்களுக்கு சண்டையிட்டு, ஆத்திரப்பட்டு, நாட்களை வீணாக்கியுள்ளோம் !!    ஊத்துக்காடு வேங்கட கவி  இயற்றிய  ஸ்வாகதம் கிருஷ்ணா..  மோஹனம்  ராகத்தில் [தாளம்: ஆதி]  கேட்டு லயித்ததுண்டா !!     



இந்த அற்புத கீர்த்தனையை இருந்து சிலவரிகளை முதலில் ரசியுங்கள் : 

ஸ்வாகதம் கிருஷ்ணா.. சரணாகதம் கிருஷ்ணா..

மதுராபுரி சாதனா.. மிருது வதனா மதுசூதனா..

.. .. ........

போகதாப்த சுலபா.. சுபுஷ்ப கந்த கலபா..

போகதாப்த சுலபா.. சுபுஷ்ப கந்த கலபா..

சிஷ்டஜனபால சங்கல்பகல்ப.. கல்ப சதகோடி அசமபராபாவ..

தீரமுநிஜன விஹார மதன.. சுகுமார தைத்ய சம்ஹாரதேவா..

 

பொதுவாக கர்நாடக இசை  கீர்த்தனைகள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுவதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானது அது சொல்லும் பொருளும் அப்பொருளை இனிதாக உணர்த்தும் இசைப்போக்கும் (tune/melody) ஆகும்.  ஊத்துக்காடு வேங்கட கவி  வரிகளில் - அர்த்தம், ஆழ்ந்த அனுபவம், துள்ளும் ஜதிகள் என பல சங்கதிகள். 

ஊத்துக்காடு வெங்கட சுப்பையர்,  திருவாரூர் மாவட்டத்தில் தக்ஷண துவாரகை எனும் மன்னார்குடியில் பிறந்தார்.    இவர் வளர்ந்த இடம் தேனுஜவாசபுரம் என அழைக்கப்படும் ஊத்துக்காடாகும்.   இந்த ஊர் திருவாருர் மாவட்டம், வலங்கைமான் தாலுக்காவில் கும்பகோணத்திலிருந்து திருக்கருகாவூர் வழியாக தஞ்சாவூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இவரின் தந்தையார் ராமச்சந்திர வாதுளர், தாயார் கமலநாராயணி. பிறந்தது, ஆவணி மாத மக நட்சத்திரம். இவரது காலம் தஞ்சையை ஆண்ட பிரதாபசிம்பன் காலம். இவரது சன்மார்க்க குரு கிருஷ்ணர்.  தமிழிசையில் கிருஷ்ணன் மீது பல்வேறு சுவையான பாடல்களைப் நெக்குருக இயற்றியவர் இவர்.  கர்நாடக இசை வடிவில் உணர்ச்சிப் பிரவாகத்தில் கண்ணன் சந்நிதியில் அவனை நேரில் பார்த்து, பேசி, உணர்ந்து, மகிழ்ந்த நிலையில் பலதரப்பட்ட பாடல்கள், அத்தனையும் தமிழுக்கு ஓர் புது வழியைக் காண்பித்த பாடல்கள்.  நூற்றுக்கணக்கான அவருடைய பாடல்கள்   இப்போது உள்ளன - இன்னும் எத்தனையோ கிடைக்காமலும்  போயிருக்கலாம். தமிழ், சமஸ்கிருதம் மராத்தி இப்படி பன்மொழிப் புலமையோடு அவர் பாடல்கள் இருக்கின்றன.    இவருடைய பாடல்களை இவரது வம்சத்தில் வந்த நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர் என்பார் பாடிக் காப்பாற்றி வந்துள்ளார்.  

ஆடாது அசங்காது வா கண்ணா, அலை பாயுதே கண்ணா, தாயே யசோதா உந்தன் ஆயர் குலச் சிறுவன் போன்ற பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை. கண்ணனை குழந்தையாக பாவித்து அவன் குறும்புகளை, லீலைகளை எழுதியிருப்பார். பாகவதத்தில் வருணிக்கப் படும் கண்ணனின் லீலைகளே பெரும்பாலும் அவரால் எழுதப்பட்டுள்ளன.  

கிருஷ்ணனை ஸ்வாகதம் சொல்லி வரவேற்றால் வருவது யாராக இருக்கும் ! - நம் பார்த்தசாரதி பெருமாள் தானே! - அவனே ஆநிரை மேய்த்தவன், அவனே கம்சனால் அனுப்பப்பட்ட அசுரர்களை வரிசையாக அழித்தவன், அவனே கோவர்தனம் ஏந்தி காப்பாற்றினவன், அவனே பாண்டவர்களுக்கு தூது சென்று, பாரதப்போர்தனிலே பார்த்தனுக்கு சாரதியாக பகவத் கீதை எனும் அற்புத வாழ்வியல் பாடமளித்தவன் 

 




இதோ இங்கே நம் ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமானின் அழகிய படங்கள் - சித்திரை ப்ரஹ்மோத்சவத்தில் 6ம் நாள் மாலை யானை வாகனத்தில் ஆரோஹணிக்க செல்லும் அவசரம் - நாள் 9.5.2023. 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
16.10.2023 



No comments:

Post a Comment