To search this blog

Monday, October 2, 2023

திருவல்லிக்கேணி கண்டேனே ! கோபுர தர்சனம் ! ஸ்ரீ நரசிம்ஹர்

திருவல்லிக்கேணி கண்டேனே ! கோபுர தர்சனம் !  ஸ்ரீ நரசிம்ஹர்

 

ஸ்ரீய:பதியான எம்பெருமான் அர்ச்சா ரூபியாய் உகந்து எழுந்தருளியிருக்கும்  திவ்யக்ஷேத்திரங்களில் பிரசித்தி பெற்ற ஸ்தலம் நம் திருவல்லிக்கேணி. தேசங்களுள் மிகவும் புராதனமாய்,   நாரதாதிகளால்  பாராட்டப்பெற்று, பரமரிஷிகள் தங்களது தவத்திற்கு ஏற்றதான ஸ்தலம் என்று பெரிதும் விரும்பப்பெற்று,  துளஸிவனம் என்று எங்கும்  ப்ரஸித்திபெற்ற திருவல்லிக்கேணி  திவ்யதேசம் முன்னொரு காலத்தில் துளசி செடிக்கள் நிறைந்த ஆரண்யம் (காடு) ஆக இருந்தது.  இத்தலத்திற்கு 'கைரவிணி, பிருந்தாவனம், ப்ருந்தாரண்யம், துளசீவனம்' - என பல பெயர்கள் உண்டு.  

 


 அல்லி அல்லது ஆம்பல் என்பது நீரில் வளரும் ஒரு கொடியும் அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும்.   திருவல்லிக்கேணி பெயர் அமையக் காரணமானது அல்லி மலர்கள் நிறைந்து இருந்த   திருக்கோவில் குளம் - கைரவிணி  புஷ்கரிணி.   நம் பகவத் ராமானுஜர் பிறக்க சோமயாஜி வேண்டி தவம் இருந்த குளம் இது.  

வேதங்கள் கர்மபாகம், ப்ரஹ்மபாகம்  என்று பிரிவுடையது. கர்மபாகம் பகவானுடைய ஆராதனங்களான கர்மாக்களைச்  சொல் லும். பிரஹ்மபாகம் பகவானுடைய ஸ்வரூப ரூபகுண விபூதிகளைச் சொல்லும்.  வேத முதல்வன் என ப்ரதிபாதிக்கப்படும் எம்பெருமான் ஸ்ரீமந்நாரணனை அனுதினமும் சேவிப்பது நம் புண்ய பலன். 

 

view from Western Gopuram - Azhagiya singar vasal 

தொண்டை மண்டலத்தில் "துண்டீரம்" என்றும் அழைக்கப்பட்ட  நாட்டை "சுமதி" என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான்.  அவனுக்கு திருமலை திருப்பதியில் கோவில் கொண்டுள்ள "திருவேங்கடமுடையான்" மீது தீவிர பக்தி -  இந்த அரசனுக்கு, பார்த்தனுக்கு (அர்ச்சுனனுக்கு) சாரதியாக (தேரோட்டியாக) விளங்கிய கிருஷ்ணன்  இத்தலத்தில் குடும்ப சமேதராக சேவை அளித்தார்.  இங்கே இரண்டு கோபுரங்கள்- கிழக்கு மேற்கு, இரண்டு கொடிமரங்கள்.  ஸ்ரீ வேங்கடகிருஷ்ணன் (ஸ்ரீபார்த்தசாரதி உத்சவர்) ஆண்டாள்; ஸ்ரீவேதவல்லி சமேத ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீ ராமபிரான், ஸ்ரீ கஜேந்திர வரதர், ஸ்ரீயோக நரசிம்மர் (உத்சவர் தெள்ளிய சிங்கர்) மற்றும் ஆழ்வார்கள் ஆசார்யர்கள் சன்னதிகள் அழகாக அமைந்துள்ளன. 

கிழக்கு ராஜகோபுரம் மற்றும் பிற கட்டமைப்புகள் தொண்டமான் சக்ரவர்த்தி முதலில் கட்டியிருந்ததாகக் கூறப்படுகிறது.  . ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி சன்னதியின் ஆனந்த விமானம், ஸ்ரீ ரங்கநாதர் சன்னதி, ஸ்ரீ ராமர் சன்னதி, ஸ்ரீ வேதவல்லி தாயார் சன்னதி, ஸ்ரீ நரசிம்மர் சன்னதி, மற்றும் ஸ்ரீ ஆண்டாள் சன்னதிகளின் விமானங்களும்  அழகுற அமைந்துள்ளன.  எம்பெருமான் தம் விமானங்கள் மிக புண்ணியம் தருபவை.  திருவரங்கம் - பிரணவாகார விமானம்; திருப்பதி - ஆனந்த நிலைய விமானம்;  திருக்கச்சி  - புண்யகோடி விமானம்; திருக்கண்ணபுரம் - உத்பலாவதாக விமானம்  - என இங்கே :  ஆனந்த விமானம்

 


இங்கே நாம் சேவிக்கும் அற்புத நரஸிம்ஹ மூர்த்தி ஆனந்த விமானத்தில் எழுந்து அருளி உள்ளார்.  தங்க தகடுகள் பதித்த அற்புத விமானத்தின் சேவை இங்கே.

 



Holy darshan of Sri Narasimha with His consorts – on the Golden plated Anandha Vimanam at Thiruvallikkeni divyadesam

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
2.10.2023 

No comments:

Post a Comment