To search this blog

Saturday, February 6, 2016

Yanai vahanam - day 6 Eve - Sri Parthasarathi Brahmothsavam 2016

The ancient kingdoms of South India had perennial rivers, monsoon forests and many elephants.  Elephants played a great role in many wars and were treated as a great wealth for the Kingdom.  The anthologies and epics of Sangam literature have given heroic admiration to elephants. Elephants are majestic – the special battalion of elephants was sought after … its thick hide would protect from injury ~ the high riding portion gave the rider a good view to attack…   At Thiruvallikkeni divyadesam, on day 6 evening, it was  ‘Yaanai vahanam’  for Sri Parthasarathi Perumal ~ the one  at Thiruvallikkeni  is in sitting posture with  golden hue.


திருவல்லிக்கேணியில் சிறப்புற நடைபெறும் ஸ்ரீபார்த்தசாரதி  ப்ரம்மோத்சவத்தில் ஆறாம் நாள்  இரவு  கம்பீரமான  யானை வாகனம். யானை பார்க்க பார்க்க கம்பீரம். ஆண் யானைக்கு களிறு என்று பெயர். பெண் யானைக்கு பிடி என்று பெயர். தமிழ் சங்க இலக்கியங்களில் யானை, வேழம், களிறு, பிடி, களபம், மாதங்கம், கைம்மாவாரணம், குஞ்சரம், இருள், தும்பு, வல் விலங்கு என பல்வேறு பெயர்களால் அறியப்பட்டதாக அறிகிறோம். யானை தந்தத்திற்கு கோடு, மருப்பு போன்ற பெயர்கள் வழங்கப்பட்டன.  பண்டைத்தமிழ் அரசுகளில் யானைப் படை முதன்மையான பங்கு வகித்தது. படை யானைகளுக்குப் பெயரும் பட்டங்களும் வழங்கப்பட்டன. பெரும்பாலான தமிழகக் கோவில்களில் யானைகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும்.  பண்டைய காலத்தில் உருவான ஒவ்வொரு கலைப்படைப்பிலும் யானைகளைப் பார்க்கலாம். சிற்பங்களிலும் சரி, இலக்கியங்களிலும் சரி யானைகளுக்குத் தரப்பட்டுள்ள இடம் தனித்துவச் சிறப்புடைய ஒன்று.  யானை மீது அமர்வது உயர்வானதாக கருதப்பட்டது.

யானை புக்க புலம் போல""   - பிசிராந்தையார் - மன்னன் அறிவுடை நம்பிக்கு வழங்கிய அறிவுரை மிகவும் சிந்திக்கக் தக்கது. அந்த வரிகளின் அர்த்தம் : விளைந்த நெல்லை அறுத்து உணவாக்கி  யானைக்குக் கொடுத்தால், அது யானைக்கு  பல நாட்களுக்கு உணவாகும். ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும், யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால், அவ்வுணவு யானையின் கால்களால் மிதிபட்டு பெருமளவில் அழியும்.  அது போல அரசனானவன்  வரி திரட்டும் முறையை கட்டமைத்து மக்களை வருத்தாமல் வரி வசூலிக்க வேண்டும்.  


திருவல்லிக்கேணி யானை வாஹனம் அமர்ந்த நிலையில், தங்க பூச்சுடன் ஜொலிக்கும். வாகனத்தின் மீது வெண்பட்டுடுத்தி, பெருமாள் பின்பு பட்டர் அமர்ந்து சாமரம் வீசி வருவது தனி சிறப்பு. யானை வாயில் வாழை மரங்கள் வைத்து, நிஜமான களிறு ஓடி வருவதைப் போல் இருக்கும்.   யானை வாகன புறப்பாட்டில் 'ஏசல்", "ஒய்யாளி"  என்று அழைக்கப்படும் சிறப்பு உண்டு.  துளசிங்க பெருமாள் கோவில் தெருவில், ஸ்ரீபாதம்தாங்கிகள் மூன்று தடவை வேகமாக முன்னும், பின்னும் ஏளப்பண்ணும்  வைபவம் இது.  முதல் இரண்டு தடவைகள் சிறிது தூரம் ஏளப் பண்ணிய பின்னர், மூன்றாவது தடவை, முழு தெருவும் வேகமாக எழுந்து அருள்வார்.  திரும்பும் போது, மிக துரித நடையிலும், அழகாகவும் ஏளப்பண்ணுவர்கள்.  பார்ப்பதற்கு யானை பீடு நடை போட்டு வருவதை போல் இருக்கும்.


திவ்ய பிரபந்தத்தில் யானை பல இடங்களில் குறிப்பிடப் படுகிறது.   பெருமாள் ஸ்ரீ மகாவிஷ்ணு, கஜேந்திராழ்வானை முதலை வாயினின்றும் விடுவித்துக் காத்தருளினமை ப்ரஸித்தம். இதையே பொய்கை ஆழ்வார் 'பிடி சேர் களிரளித்த பேராளா' என்கிறார். மூன்றாம் திருவந்தாதியில் பேயாழ்வார்திருவேங்கடத்தில், மேகங்களை தவறாகப் புரிந்து கொண்டு, தனது துதிக்கையை எடுத்துக் கொண்டு வேகமாயோடி குத்த ஓடுமாம் மத யானை -  அந்த யானை திருமலையில் உறைகின்ற வேங்கடவனை  என்றென்றும் துதித்து வணங்குமாம்.     "வேங்கடவனையே கண்டு வணங்கும் களிறு" - என்கிறார்.  யானை மீது அமர்வது உயர்வானதாக கருதப்பட்டது. குலசேகரர் அழகிய திருமலையிலே ஏதாயினும் இருக்கும்படியான பாக்கியம் கிடைத்தால் யானையின் மீது அமர்வது கூட வேண்டாம் என்கிறார்.

கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து*
இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான்வேண்டேன்*
எம்பெருமானீசன் எழில்வேங்கடமலை மேல்*
தம்பகமாய் நிற்கும் தவமுடையேனாவேனே**

தன்னைக் பார்க்கின்றவர்க்கு  அச்சத்தால் நடுக்கத்தை விளைக்கின்ற  மதங்கொண்ட யானையினது கழுத்தின் மீது அமரும்  சுகங்களையும், ஐசுவர்யத்தையும் அரசாட்சியையும் விரும்ப மாட்டேன்:   எமது தலைவனும் எம்பெருமானுமான  ஸ்ரீமன் நாராயணன் வாழும்  அழகிய திருமலையிலே  புதராய் நிற்கும்படியான  பாக்கியத்தை   உடையவனாகக்கடவேன் ~ என்பது குலசேகரர் வாக்கு !!

இன்றைய புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட   சில படங்கள் இங்கே : 
அடியேன்   ஸ்ரீனிவாச தாசன். 

5th Feb 2016.








No comments:

Post a Comment