To search this blog

Tuesday, April 22, 2014

Day 6 Eve - Sri Parthasarathi Yanai vahanam

Thiruvallikkeni Sri parthasarathi Brahmothsavam –
Day 6 – Yaanai Vahanam

 கோடு, மருப்பு  போன்ற சொற்களின் அர்த்தம் தெரியுமா !

Today 20th Apr 2014  – is the sixth day of Brahmothsaam and in the evening Sri Parthasarathi had purappadu on ‘Yaanai vahanam’ ~ a majestic sitting one at that in golden hue.   When Kings ruled, there was the special battalion of Elephants… its thick hide would protect from injury ~ the high riding portion gave the rider a good view to attack…  Elephants are attractive and have been held in esteem for centuries ..


திருவல்லிக்கேணியில் சிறப்புற நடைபெறும் ப்ரம்மோத்சவத்தில் ஆறாம் நாள் இன்று இரவு  ஸ்ரீபார்த்தசாரதி கம்பீரமான  யானை வாகனத்தில் எழுந்து அருளினார். திருவல்லிக்கேணி யானை வாஹனம் அமர்ந்த நிலையில், தங்க பூச்சுடன் ஜொலிக்கும். மிக கம்பீரமானது. வாகனத்தின் மீது வெண்பட்டுடுத்தி, பெருமாள் பின்பே பட்டரும் அமர்வது தனி சிறப்பு. யானை வாயில் வாழை மரங்கள் வைத்து, நிஜமான களிறு ஓடி வருவதைப் போல் இருக்கும்.  

யானை வாகன புறப்பாட்டில் 'ஏசல்", "ஒய்யாளி"  என்று அழைக்கப்படும் சிறப்பு உண்டு.  துளசிங்க பெருமாள் கோவில் தெருவில், ஸ்ரீபாதம்தாங்கிகள் மூன்று தடவை வேகமாக முன்னும், பின்னும் ஏளப்பண்ணும்  வைபவம் இது.  முதல் இரண்டு தடவைகள் சிறிது தூரம் ஏளப் பண்ணிய பின்னர், மூன்றாவது தடவை, முழு தெருவும் வேகமாக எழுந்து அருள்வார்.  திரும்பும் போது, மிக துரித நடையிலும், அழகாகவும் ஏளப்பண்ணுவர்கள்.  பார்ப்பதற்கு யானை பீடு நடை போட்டு வருவதை போல் இருக்கும்.

யானை பார்க்க பார்க்க கம்பீரம். ஆண் யானைக்கு களிறு என்று பெயர். பெண் யானைக்கு பிடி என்று பெயர். தமிழ் சங்க இலக்கியங்களில் யானை, வேழம், களிறு, பிடி, களபம், மாதங்கம், கைம்மா, உம்பர், வாரணம், அஞ்சனாவதி, அத்தி, அத்தினி, அரசுவா, அல்லியன், அறுபடை, ஆம்பல், ஆனை, இபம், இரதி, குஞ்சரம், இருள், தும்பு, வல் விலங்கு ஆகிய பெயர்களால் அறியப்பட்டதாக அறிகிறோம்.  யானை தந்தத்திற்கு கோடு, மருப்பு போன்ற பெயர்கள் வழங்கப்பட்டன. யானை மீது அமர்வது உயர்வானதாக கருதப்பட்டது.

பண்டைத்தமிழ் அரசுகளில் யானைப் படை முதன்மையான பங்கு வகித்தது. படை யானைகளுக்குப் பெயரும் பட்டங்களும் வழங்கப்பட்டன. பெரும்பாலான தமிழகக் கோவில்களில் யானைகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும்.  பண்டைய காலத்தில் உருவான ஒவ்வொரு கலைப்படைப்பிலும் யானைகளைப் பார்க்கலாம். சிற்பங்களிலும் சரி, இலக்கியங்களிலும் சரி யானைகளுக்குத் தரப்பட்டுள்ள இடம் தனித்துவச் சிறப்புடைய ஒன்று.

குலசேகரர் அழகிய திருமலையிலே ஏதாயினும் இருக்கும்படியான பாக்கியம் கிடைத்தால் யானையின் மீது அமர்வது கூட வேண்டாம் என்கிறார்.

கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து*
இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான்வேண்டேன்*
எம்பெருமானீசன் எழில்வேங்கடமலை மேல்*
தம்பகமாய் நிற்கும் தவமுடையேனாவேனே**

தன்னைக் பார்க்கின்றவர்க்கு  அச்சத்தால் நடுக்கத்தை விளைக்கின்ற  மதங்கொண்ட யானையினது கழுத்தின் மீது அமரும்  சுகங்களையும், ஐசுவர்யத்தையும் அரசாட்சியையும் விரும்ப மாட்டேன்:   எமது தலைவனும் எம்பெருமானுமான  ஸ்ரீமன் நாராயணன் வாழும்  அழகிய திருமலையிலே  புதராய் நிற்கும்படியான  பாக்கியத்தை   உடையவனாகக்கடவேன் ~ என்பது குலசேகரர் வாக்கு !!

இன்றைய புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட   சில படங்கள் இங்கே : 

அடியேன்   ஸ்ரீனிவாச தாசன். 




the photo above ~ chinna pasanga perumal ... 
have a look at the battar too.. !!

No comments:

Post a Comment