To search this blog

Thursday, April 21, 2022

Sri Parthasarathi Perumal Churnabishekam - Thiruchandavirutham 2022

Sri Parthasarathi Perumal Churnabishekam - Thiruchandavirutham 2022

Churnabishekam – Tiruchandavirutham – 2022



பல்லாயிரக்கணக்கான வருட சரித்திரத்தில் - மனித இனம் கொள்ளை நோய்கள், பெரும் போர்கள், இயற்கை சீற்றங்கள், விலங்குகளின் தாக்குதல், கடல் கொள்ளுதல், வெள்ளப்பெருக்கு, பஞ்சம் போன்ற பற்பல பேரழிவுகளை பார்த்துள்ளது.  மற்றும் சாதாரண அசாதாரண மரணங்களும் சம்பவிக்கின்றன !   எனினும் தீநுண்மி,  இந்த சொல் உலகத்தை ஆட்டிப்படைத்துள்ளது.   அண்டங்களுக்குக் காரணமாய் குணங்களோடு கூடிய நிலம் நீர் தீ கால் விசும்பெனும் ஐம்பூதங்கட்கு அந்தராத்மாவாய்  நிற்கிற ஸ்ரீமன் நாரணன் மட்டுமே உபாதாந காரணம்;  திருப்பாற்கடலில் சயனித்து இருக்கும்  பரமபுருஷன் மட்டுமே நம்மை காக்கவல்லன். 

சில பேருக்கு திடிரென மயக்கம் வரும். அப்படி மயக்கம் வரக் காரணம் என்னவாக இருக்கும் என யோசனை செய்துள்ளீர்களா?  மயக்கம்,  என்பது மூளைக்குத் தேவையான அளவு ஆக்சிசன் சேர்ந்த குருதி கிடைக்கும் அளவு குறையும் பொழுது ஏற்படும் நிலை!   மயக்கத்தில் பல வகை உண்டு. காதல் மயக்கம், இசை மயக்கம், இயற்கை மீது மயக்கம், புத்தக வாசிப்பில் மயக்கம் போன்ற மனம் சார்ந்த மயக்கங்கள் வாழ்க்கையை ரசிப்பதற்கு உதவுவதால், அவற்றை வரவேற்கிறோம். அதே வேளையில் நாம் நன்றாக இருக்கும்போதே திடீரென்று கண்கள் இருட்டிக்கொண்டு வர, நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாத அளவுக்கு மூளை வேலைநிறுத்தம் செய்ய, தடாலடியாகக் கீழே சாய்ந்து விழும் உடல் சார்ந்த மயக்கத்தை யாரும் விரும்புவதில்லை.  உடல் சார்ந்த மயக்கத்தில் குறு மயக்கம், நெடு மயக்கம் என இரு வகை உண்டு. குறு மயக்கம்  காரணம் மூளைக்கு ரத்தம் செல்ல தடை ஏற்படுவது தான். ஏதாவது ஒரு காரணத்தால் ரத்த ஓட்டம் சில நிமிடங்களுக்கு இடுப்புக்குக் கீழே நின்று விடுகிறது. மூளைக்குச் செல்லும் ரத்தம் குறைகிறது. இதனால் மயக்கம் ஏற்படுகிறது. மயங்கித் தரையில் விழுந்ததும் ரத்த ஓட்டம் சரியாகி விடுகிறது. இதனால் மயக்கமும் சரியாகிவிடுகிறது.  மனக் கவலை, இழப்பு, சோகம், திகில், அதிர்ச்சி போன்ற உளவியல் காரணங்களால் வயதில் பெரியவர்களுக்கு குறு மயக்கம் ஏற்படுகிறது. இறப்பு, இழப்பு போன்ற அதிர்ச்சி தரும் செய்திகளை கேட்டதும் மயக்கம் வர வாய்ப்பு உள்ளது.  நிற்க!  

இது உடல் ரீதியான பாதிப்பு பற்றிய பதிவல்ல !! மயக்குமவன் பற்றிய பதிவு .. .. நம்மை மயக்கும் அவ்வல்லவன் அசாதாரணன் - "மன்னுசோதி மாமாயன்" - மன்னுசோதி – எனும்படி விலக்ஷணமான திவ்யமங்கள விக்ரஹத்தை கொண்ட “ஆதியஞ்சோதியுரு“ என்ற நம் ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான்.  திருவல்லிக்கேணியில் சிறப்புற நடைபெறும் ப்ரம்மோத்சவத்தில். ஆறாம்நாள் ~சூர்ணாபிஷேகம் உத்சவம்.    அன்று காலை அருள்மிகு ஸ்ரீபார்த்தசாரதி அழகு பொலிந்திட தங்கசப்பரத்தில் புறப்பாடு கண்டு அருள்கிறார்.    



ஆழ்வார்கள் மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள்.  பைந்தமிழால் எம்பெருமானை பாடியவர்கள்.  ஸ்ரீவைணவர்களாகிய நாமும் அருளிச்செயல் எனும் அற்புத தமிழ் பாடல்களினால் அனுதினமும் ஸ்ரீமன் நாரணனை வணங்கி தொழுகிறோம்.   கொஞ்சம் தமிழ் இலக்கணம் இங்கே !  -  திருச்சந்தவிருத்தம்  ஓர் செய்யுள் வகை.  செய்யுள் என்பது எடுத்துக்கொண்ட பொருள் விளங்கச் சுருக்கமாகச் செய்யப்படுவது.   செய்யுள்கள் ஒரு இலக்கண வரம்புக்கு உட்பட்டே அமைய வேண்டும். யாப்பு’ என்னும் சொல்லுக்குச் செய்யுள் என்பது பொருள். நரம்பு, தோல், தசை, எலும்பு, கொழுப்பு, குருதி முதலியவற்றால் யாக்கப்பட்ட (கட்டப்பட்ட) உடலை யாக்கை என்று வழங்குகிறோம். இதேபோல எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை முதலியவற்றைக் கொண்டு கட்டப்படுவது யாப்பு என்று அழைக்கப்படுகிறது.  

தமிழில் பாக்களில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்று நான்கு வகைகள் உள்ளன; தவிர மூன்று இனங்கள் உள்ளன. அவை - தாழிசை, துறை, விருத்தம் என்பன. பாவகைகளின் இலக்கணத்திற்கும் பாவின இலக்கணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இல்லை.  ஆசிரிய விருத்தம் என்பது தமிழின் பாவகைகளுள் ஒன்றான ஆசிரியப்பாவின் இனங்களில் ஒன்று. இது அளவொத்த  அடிகளில் அமையும். ஒவ்வொரு அடியும் அறுசீர் முதல் பல சீர்கள் கொண்டு அமையும். மோனை சிறப்பாக வெளித்தெரியுமாறு அடிகள் இரண்டாக மடக்கி எழுதப்படும். எண்சீர் அடிகள் நான்கு ஒரே எதுகை அமைப்பில் வருவது.  திருச்சந்தவிருத்தம்  எண்ணடுக்கி  செய்யுள் வகை.  

ஸ்ரீரங்கத்து உலக்கை என்றொரு வழக்காடு உண்டு. ஸ்ரீரங்கத்தில் கோவிலில் பெருமாளுக்கு அமுது செய்விக்க  மாவு இடித்தல் போன்ற வேலைகளைச் செய்வது வழக்கம். இந்தப் பொறுப்பை ஏற்போர், நாள் முழுதும் மாவு இடிக்க வேண்டும். இதை மேற்பார்வையிட ஒரு கண்காணியும் இருப்பார்.  வேடிக்கையாக,  யாராவது அந்தப் பக்கம் வருவோர் போவோரிடம், “இந்தாருங்கள், கொஞ்சம் இந்த உலக்கையைப் பிடியுங்கள், இதோ வருகிறேன் என்று உலக்கையைக் கை மாற்றுவார்கள்  - . மாற்று ஆள் வந்து உலக்கை பிடிக்கும் வரை, சூரிய அஸ்தமன நேரம் வந்தாலும் இடை விடாமல் மாவு இடித்தாக வேண்டுமாம் !   

உரல்  என்பது அரிசி முதலான தானியங்களைக் குற்ற, இடிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது மூன்று அடி வரை உயரமுள்ள ஏறத்தாழ ஓர் அடி விட்டமுள்ள மரத்தினால் அல்லது கருங்கல்லினால் ஆக்கப்பட்டிருக்கும். இதன் ஒரு பக்கத்தில் அரை அடி முதல் ஓர் அடிவரையான ஆழத்தில் ஒரு குழி போன்று அமைக்கப்பட்டிருக்கும். இந்தக்குழிக்குள் அரிசி முதலான தானியங்களை இட்டு  இரும்பு பூண் கொண்ட மர  உரலில் உலக்கையைப் பாவித்து குற்றுவார்கள். இப்படிச் செய்வதால் அதற்குள் இடப்பட்ட தானியம் துகள்களாக்கப்பட்டுப் பின்னர் பொடியாக்கப்படும்.  பொடிக்கு சூர்ணம் என்றொரு பெயருண்டு.  



சூர்ணாபிஷேகம் சிறப்பு.:     சூர்ணம் என்றால் பொடி. கஸ்தூரி மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களால் ஆன சூர்ணம் பெருமாளுக்கு சமர்பிக்கப்படுகிறது. இது நறுமணத்திற்கு ஆகவும் பெரியவாகனங்களில் எழுந்து  அருளிய களைப்பு தீரவும் ஏற்பாடு பண்ணப்பட்டதாக இருக்கலாம்.  திருகோவிலில் பெருமாள் முன்பு உரலில் இந்த சூர்ணம் உலக்கையால் புதிதாக இடிக்கப்பட்டுபெருமாள் திருமேனியில் சாற்றப்படுகிறது. இந்த சூர்ணம்அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்படுகிறது. திருவீதிப்  புறப்பாட்டில் திருமழிசை ஆழ்வார் அருளிய "கருச்சந்தும் காரகிலும் கமழ்கோங்கும் மணநாறும் திருச்சந்த விருத்தம்" அனுசந்திக்கப்படுகிறது. விருத்தப்பா எனும் பாடல் வகையைச் சார்ந்த 120  பாசுரங்களால் ஆன பிரபந்தம் இது.  இதோ இங்கே திருமழிசைப்பிரானின்  *திருச்சந்தவிருத்தத்தின்* ஈற்றுப்  பாசுரம் : 

இயக்கறாத பல்பிறப்பில்  என்னைமாற்றி இன்றுவந்து*

உயக்கொள்  மேகவண்ணன்  நண்ணியென்னிலாய தன்னுளே*

மயக்கினான்றன் மன்னுசோதி ஆதலாலென் ஆவிதான்*

இயக்கெலாமறுத்து   அறாத இன்பவீடு பெற்றதே.  

தனது பக்தர்களின் கஷ்டங்களை நிவர்த்தி செய்து, உஜ்ஜீவிக்கச் செய்பவனான மேகவண்ணன்          (நம் நீலமேக ஷ்யாமளனான பகவான் ஸ்ரீ கிருஷ்ணன்),  இன்றைக்கு நிர்ஹேதகமாக, தொடர்ச்சிமாறாமல் நெடுகச் செல்லும்படியான பலவகைப் பிறப்புகளினின்றும், அவற்றில் சுழன்று உழல்கின்ற, அடியேனை மாற்றுகைக்குத் திருவுள்ளம் பற்றி, இங்கேயெழுந்தருளி  என் போன்ற நீசர்களையும்  நெருங்கி,  தன்னோடு அவிகாபூதமான என்னுள்ளே,  தன்னுடைய  மன்னுசோதியாம், நித்ய ஜ்யோதிர்மயமான திவ்ய மங்கள விக்ரஹத்தை ஸம்ச்லேஷிப்பித்தான்!   இவ்வாறு, எம்பெருமான் என்னை மயக்கி, என்னுளே   கலந்தருளுகையாலே,  என்   ஆத்ம வஸ்துவான என்னாவி,  ஒன்றோடொன்று  இணைந்து கிடந்த அவித்யாதிகளை வேரறுத்து, ஒருநாளும் முடியாத இன்பமாகிய மோக்ஷஸுகத்தை பெற்றாதயிற்று என உரைக்கின்றார் திருமழிசை ஆழ்வார் இந்த பாசுரத்திலே!!  







 On 6th day of Brahmothsavam at Thiruvallikkeni  Divyadesam for Sri Thelliya Singar – it would commence with  ‘Choornabishekam’, and then  Sri Parthasarathi perumal purappadu in ‘Ananda nilaya Vimanam [Punniya Kodi vimanam]’. In the purappadu,   ‘Thiruchanda Virutham’ given to us by Sri Thirumazhisai Azhwaar would be rendered.   These 120 songs fall under the type ‘viruthapaa’ – they are replete with numbers and fall under a specialized category of tamil grammar called ‘ennadukkicheyyul’.  

Here are some  photos taken during the day 6 purappadu of Sri Parthasarathi Swami Chithirai  brahmothsavam this morning. 

adiyen Srinivasadhasan (Mamandur Veeravalli Srinivasan Sampathkumar)
21.04.2022
 

திவ்யப்ரபந்த பாசுர விளக்கம் : ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் சுவாமி - ஒப்புயர்வற்ற களஞ்சியமான திராவிடவேதா இணையத்தில் இருந்து.












  

1 comment: