To search this blog

Tuesday, February 1, 2022

Thiruvallikkeni Sri Parthasarathi Perumal Thai Amavasai purappadu 2022

இன்று 31.1.2022  தை  அமாவாசை.  திருவல்லிக்கேணி வாசிகளுக்கு, வாழ்வில் இன்று ஒரு இனிய மறக்கமுடியாத தருணம்.  பலமாதங்கள் பிறகு இன்று மாலை திருவீதி புறப்பாடு  - ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் குலம்குலமாக பரம்பரையாக வழிபட்டுவரும் நம் பார்த்தசாரதி எம்பெருமான் இன்று திவ்யதரிசனம் அளித்தார்.  மாட வீதிகளில் மக்கள் ஆனந்தமயமாக நின்று தரிசித்து இன்புற்றனர். 

ஊழி - உலகம் அழியும் .. .. அந்தகாரம் எனும் இருள் எங்கும் சூழும் .. .. உலகம் அழிவது பற்றிய குறிப்பு ஒவ்வொரு சமுதாயத்திலும் உள்ளது.  ஆழிப்பேரலை எனும் மிக பெரிய வெள்ளத்தால் உலகம் அழியும் என்பது பல சமயங்களின் கணிப்பு.    உலகம் அழிவது யாருக்கும் சம்மதமில்லை. இருந்தாலும் அப்படி ஓர் அழிவு வருமானால் என்ன செய்வது? எங்கு போவது? எப்படி இந்த அழிவிலிருந்து தப்பிப் பிழைப்பது? இதுவரை ஆசை ஆசையாய் சேர்த்து வைத்த செல்வத்தை எல்லாம் என்ன செய்வது? அன்பான குழந்தைகள், ஆதரவான உறவுகள், அறிவார்ந்த நட்புகள் எல்லாரையும் விட்டுப் பிரிய வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதா? உயிர்மேல் ஆசையில்லாதவர் யார்? மற்ற மற்ற உயிரினங்களைவிட மனிதர்களுக்கு உயிர்மேல் ஆசை அதிகம். மனித வாழ்க்கை என்பது சுமார் 100 ஆண்டுகளாகும். மற்ற உயிரினங்களுக்கு ஆயுள் குறைவுதான்; இருந்தாலும் மனிதன் ஊழி ஊழிக்காலம் உயிர் வாழ்வதைப்போலவே எண்ணிக் கொண்டு பேராசையோடு செல்வங்களைச் சேர்க்கிறான். உலகம் அழியப் போகிறதாமே என்று கேள்வி கேட்டுக்கொண்டு அமைதி இல்லாமல் அல்லாடுகிறான்; தடுமாறுகிறான்.

மனிதர்கள் இரவு உறங்குவர்.  காலை எழுந்து இருப்பர் - சில சிறு வேலைகளுக்கு பின்னர் உத்யோகம் செல்வர், காலை, மதியம், இரவு உணவு உண்ணுவர்.  செல்வம் தேடுவர், ஈட்டுவர் - அந்த பணத்தை தேடி பேராசையுடன் ஓடுவர் .. .. மறுபடி இரவு, மறுபடி பகல் .. .. 2020 ஆண்டு ஜனவரி மாதத்தில் எங்கோ வூஹான் என்ற சீன தேசத்திலே புது வியாதி வந்துள்ளதாகவும், மக்கள் கொத்துக்கொத்தாக மடிவதாகவும் செய்தி பரவியது.  நாம், நம்மில் பலர் நினைத்தது - இந்தியா போன்று பல்வேறு கடின சூழல்களில் வாழ்பவர்களை இவை ஒன்றும் செய்யா!  

ஒரு நாள் - மெரீனா கடற்கரை மூடப்பட்டது.  இந்திய அரசாங்கம் ஒரு நாள் அடையாள கட்டுப்பாட்டை கொண்டு வந்தது.  மார்ச் மாதம் 20ம் தேதி, 2020  முதல் திருக்கோவில்கள் மூடப்பட்டன.  இரண்டொரு நாட்களில், ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது.  கொரோனா நோய் பரவியது ! - மக்கள் பலர் மாண்டனர்.  பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.

பிரளயம் வந்து உலகம் அழிவது பற்றி புராண இதிகாசங்கள் குறிப்பிடுகின்றன. கடல்கோள் ஏற்பட்டு குமரிக்கண்டம் அழிந்ததைப் பற்றி தமிழ் இலக்கியங்கள் சுட்டுகின்றன.   அண்மையில் ஏற்பட்ட ஆழிப் பேரலை என்னும் சுனாமியை நேரில் பார்த்துவிட்டதால் மனித குலம் மேலும்  கவலைப்பட ஆரம்பித்தது.




உலகம் எப்படி அழியும்?   பூமியின் மீது வால்நட்சத்திரம் மோதினால் உலகம் அழியும். ஜூராசிக்பார்க் படத்தின்  டைனோசர்கள் போன்ற பிரம்மாண்ட உயிரினங்கள் அழிந்து போனதற்கு இதுவும் ஒரு காரணம்.    சூரியமண்டலத்திற்கு வெளியே  நூற்றுக்கணக்கான வால்நட்சத்திரங்கள் உள்ளன. அவற்றின் சுற்றுப்பாதையில் சூரியனை சந்திக்க வரும் போது பூமியில் மோதினால் பெரிய அளவில் அழிவு ஏற்பட்டு மனித இனம் அழியலாம்.  நம் பூமி சூரியனை சுற்றுவதைப்போல சூரியன் பால்வெளி மண்டலம் (கோடிக்கணக்கான நட்சத்திரம் அடங்கிய பகுதி)  என்கிற நட்சத்திர மண்டலத்தை சுற்றி வருகிறது.  அப்படி சுற்றிவரும் போது கதிர்வீச்சு அதிகம் உள்ள பகுதிக்குள் சூரியன் பயணம் செய்யும் பொழுது பூமியில் உள்ள உயிரினங்கள் அடியோடு அழிந்து போகும் வாய்ப்பு உண்டு.

இவை எல்லாம் வேண்டாம் .. .. நாடுகளிடையே மற்றுமொரு உலகப்போர் மூளலாம்.  அமெரிக்காவிடம் உலகத்தை அழிக்கவல்ல அணு ஆயுதங்கள் உள்ளன.  இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் உள்ளன. இவற்றை வைத்து எத்தனை முறை வேண்டுமானலும் உலத்தை அழிக்கலாம்.  திருவள்ளுவர்  உலகம், பண்புடையவர்கள் இல்லாவிடில் அழியும் என்கிறார்.   

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அது இன்றேல்

மண்புக்கு மாய்வது மன் (குறள் 996)

நல்ல பண்புகள் (குணங்கள்) உடையோர் வாழ்வதால்தான் இந்த உலகம் அழியாமல் இருக்கிறது. சான்றோர் இல்லாவிடில் நிலநடுக்கம் (பூகம்பம்) உண்டாகி எல்லாம் மண்ணுக்குள் புதைந்துவிடும்.  கலியுகம் முற்றிப்போய், நல்லவர்கள் குறைந்துவிட்டால், உலகம் அழிந்துவிடும். புராணங்களும், மஹாபாரதமும் சொன்ன அதே கருத்தை வள்ளுவனும் வழி மொழிகிறாரோ !!

மார்ச் மாதம் 20ம் தேதி, 2020  முதல் மூடி இருந்த கோவில்கள் செப்ட் 7 முதல் பக்தர்களுக்கு திறந்தன.  நவம்பர் 30 திருக்கார்த்திகை தீபம் - திருப்பாணாழ்வார் சாற்றுமுறை அன்று ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோபுர வாசல் தாண்டி எழுந்துஅருளினார்.  6.1.2021  முதலாக ஸ்ரீஆண்டாள் திருவீதி புறப்பாடு.  சேவித்த பக்தர்கள் அனைவருக்கும் ஆனந்தம்.

In the year 2020,  last purappadu for Sri Parthasarathi was on Masi magam [9.3.2020]; then there was Gajendra varadhar thavanothsavam, Sri Azhagiya Singar thavanothsavam (3 days)    15.3.2020   –   then after Corona lockdown – there could be  no veethi purappadu for 297  days !.

2021 was no different  .. .. at Thiruvallikkeni there were to be two brahmothsavams in Feb & Mar, then as the  ThiruAvathara Uthsavam of the Greatest Acharyar ~ Nammiramanusar   – started (9.4.2021) – in the morning it was ‘Thanga pallakku’ and in the evening ‘Mangalagiri’ – and  no purappadu after that for the whole year. In between Sri Parthasarathi did come out on Karthigai day and lit chokkapanai but no mada veethi purappadu – and during Neeratta uthsavam to there was purappadu of Andal from Temple till neeratta mantap only. Now after  another 297 days  [9.4.2021 – 31.1.2022] – there was thiruveethi purappadu of Sri Parthasarathi perumal on Thai Amavasai day. 

அடிவண்ணம் தாமரை அன்று உலகம் தாயோன்

படிவண்ணம் பார்க்கடல் நீர் வண்ணம், - முடிவண்ணம்

ஓராழி வெய்யோன்  ஒளியும் அஃது அன்றே

ஆராழி  கொண்டாற்கு அழகு 

முதலாழ்வார்கள் உலகளந்த சரிதையிலே மிகவும் ஆழ்ந்திருப்பர்களென்பது ப்ரஸித்தம்.  எம்பெருமானுடைய திருமேனியை உகப்பது  போலே, அவனது திருவடித்தாமரைகளையும் உகப்பர் பெரியோர்.  பேயாழ்வாரின் அமுத வரிகளிலே :  முன்பு உலகங்களை அளந்த  பெருமானுடைய  திருவடிகளின் நிறம், அன்றலர்ந்த  தாமரைப்போலே சிவந்திராநின்றது; திருமேனியின் நிறம் -  பூமியைச் சூழ்ந்த கடல் நீரின் வண்ணம் போல் கறுத்துக் குளிர்திராநின்றது.;  அவன் அணிந்த கிரீடத்தினுடைய நிறம் -  ஒற்றைச்சக்கரமுடைய தேரிலேறின ஸூர்யனுடைய நிறம் போன்றது, அப்பெருமானுடைய  தேஜஸ் அந்த ஸூர்யப்ரகாசம் போன்றதேயன்றோ ~ என பொன்னிவர் மேனி மரகதப்பெருமானின் விசேஷனாதிகளை சிலாகிக்கின்றார்.  

இப்பூவுலகில் தீமைகள் எல்லாம் நீங்கி, கொரோனா போன்ற நோய்கள் பறந்தோடி - நாம் அனைவரும் சந்தோஷத்துடன் வாழ எம்பெருமானை பிரார்த்திப்போம்.  இன்று ஒரு நல்ல தொடக்கம்.  இனிவரும் நாட்களில் எந்த குறைபாடும் இல்லாமல் உத்சவங்கள் சிறப்புற நடக்க அவ்வெம்பெருமானையே வேண்டுவோம். 

இன்றைய தை  அமாவாசை புறப்பாட்டின் சில புகைப்படங்கள் இங்கே ! 

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
31.1.2022

  


















1 comment: