நம் சனாதன தர்மமும் ஹிந்து சமயமும் அற்புத
வாழ்வியல் நெறிகள். நம்மை செம்மைப்படுத்தி நெறிப்படுத்தும் இந்த
அற்புத தர்மத்தில் மிக சிறப்பான சடங்கு சம்பிரதாயங்களை நம் பூர்வர்கள் ஏற்படுத்தி
உள்ளனர். ஸ்ரீ வைணவ திருத்தலங்களில்
ப்ரஹ்மோத்சவம் சிறப்பானது. பெரிய வாகனங்கள், பூமாலைகள், அழகு வஸ்திரங்கள்,
ஒன்று கூடும் மக்கள் என பலப்பல !! .. ..
.. இது எம்பெருமானுக்கு அற்புத கைங்கர்யம் செய்யும் அர்ச்சர்களுக்கு மரியாதை எனும்
சிறப்பு ஏற்பாடு பற்றிய பதிவு.
திருஅல்லிக்கேணி திவ்யதேசத்தில் - இரண்டு
பிரம்மோத்சவங்கள் சிறப்பாக நடக்கின்றன. ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் பிரம்மோத்சவம் ~
சித்திரை திருவோணத்தில் (Apr - May) நடக்கிறது. கோவில்களில் நரசிம்ஹர் உக்கிரமாக
எழுந்தருளி இருப்பார்; அல்லிக்கேணியிலோ நரசிம்ஹர் அற்புத அழகுடன் சாந்த
ஸ்வரூபிஆக, தெள்ளிய சிங்கனாய் - ஸ்ரீ அழகிய சிங்கர் என்ற திரு
நாமத்துடன் எழுந்து அருளி உள்ளார். அழகிய சிங்கருக்கு ஆனி மாதத்திலே பிரம்மோத்சவம். கொரோனா காரணமாக 2020ல் உத்சவங்கள் நடைபெறவில்லை.. ..
ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோத்சவம் பத்து நாட்கள் நடைபெறுகிறது. பத்து நாட்கள் என்று சொல்லப்பட்டாலும், - உத்சவத்துக்கு இரண்டு நாட்கள் முன்பு 'செல்வர் கொத்து’ எனும் செல்வர் உற்சவம் புஷ்ப பல்லக்குடன்
துவங்குகிறது. அடுத்த நாள், அங்குரார்ப்பணம். உத்சவ கால தொடக்க நாளில் 'த்வஜாரோஹணம்' - கோவில் வாசலில் நுழைவாயிலை கடந்து உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்படுகிறது. முப்பது முக்கோடி தேவர்களையும் வருவித்து, ஆவாஹனம் செய்து - தினமும் வாகன புறப்பாடு முன்பே - விஷ்வக்சேனர் சென்று எட்டு திக்கிலும் தேவதைகளுக்கு பலி சாதிக்கப்பெற்று உத்சவம் நடக்கிறது. பல வாஹனங்களில் - தர்மாதி பீடம், கருட வாஹனம், அம்ச வாஹனம்,
சூர்யா சந்திர ப்ரபைகள், ஹனுமந்த, யானை, குதிரை வாகனங்கள் என ஒவ்வொரு வேளையுமே ஒவ்வொரு
சிறப்பு. திருத்தேர் அதி விசேஷம். ஒன்பதாம்
நாள் காலை ஆளும் பல்லக்கில், பெருமாள் கணையாழியை தேடும் போர்வை களைதல் முடிந்து, ப்ரணயகலகம்
'மட்டையடி’ என கொண்டாடப்பட்டு, இரவு கண்ணாடி பல்லக்கு புறப்பாடு முடிந்து, கொடி இறங்குகிறது.
பத்தாம் நாள் காலை புறப்பாடு கிடையாது. ஸ்ரீ பார்த்தசாரதி, ஆண்டாள் ஏக பீடத்தில், திரு தெள்ளியசிங்கர், சக்கரவர்த்தி திருமகன், ஸ்ரீ வரதர், ஸ்ரீ வேதவல்லி சமேத மன்னாதர் ~ மற்றும் அனைத்து ஆழ்வார்கள் ஆசார்யர்கள் எழுந்து அருளப்பெற்று - த்வாதச ஆராதனம் சிறக்கிறது. பத்து நாட்கள் வீதிதனிலே - முதலாயிரம், இரண்டாவதாயிரம் (திருமொழி); இயற்பா சேவிக்கப்படுகிறது. பத்தாம் நாள் - நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி
சேவிக்கப்படுகிறது. இரவு வெட்டிவேர் தேர் எனும் சிறிய திருத்தேரில் புறப்பாடு
நடக்கிறது. புறப்பாடு முடிய இரவு சுமார் 10.30 மணி ஆகிறது. ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான் உள்ளே எழுந்தருளி, பட்டர் சப்தாவரணம் நடத்துகிறார். உத்சவ கால விவரணங்கள் நம் முன்னோர்களால் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
நள்ளிரவில் - ப்ரம்மோத்சவத்தை காப்பு கட்டிக்கொண்டு
சிறப்புற நடத்திய பட்டருக்கு மரியாதை. திருக்கோவில்
திருச்சின்னங்கள், திருக்குடைகள், அத்யாபகர் ஸ்வாமிகள், பரிஜனங்கள் கூட, பட்டரை அவர்
தம் திருமாளிகைக்கு சென்று அங்கே வேத விண்ணப்பத்துடன்
இவ்விழா முடிவடைகிறது. இவ்வருடம், சிறப்புற
நடந்தேறிய ப்ரம்மோத்சவத்தின் முடிவில் – 26.4.2022 நள்ளிரவில் பெரியமுறை மிராசுதாரர் ஸ்ரீ பார்த்தசாரதி பட்டர் சுவாமி மரியாதை வைபவத்தின்
போது அடியேன் எடுத்த ஒரு குறுங்கானொளி இங்கே.
: https://youtu.be/by5sIXGwTCw
Here is a short video taken by me on 26.4.2022 depicting Battar maryathai for Periyamurai Mirasu Sri Parthasarathi Battar. Incidentally with this Uthsavam Sri Parthasarathi Battar had performed dwajarohanam 50 times ! which is indeed a significant accomplishment.
~ அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.
Mamandur Veeravali Srinivasan Sampathkumar
No comments:
Post a Comment