To search this blog

Thursday, October 10, 2024

காக்கைச் சிறகினிலே நந்தலாலா! ~ 'எங்கும் உளன் கண்ணன்' !!!

அகிலம் போற்றும் பாரதத்தில் எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன் பற்பல அவதாரங்களை எடுத்து துஷ்டர்களை கொன்று, தன் பக்தர்களை காப்பாற்றி, தர்மத்தை நிலை நாட்டினான்.  இவ்வவதாரங்களில், இதிஹாச புராணங்களாலே புகழப்படுவது - 'இராமாவதாரமும் - கிருஷ்ணாவதாரமும்'.

 


பகவான் ஸ்ரீகிருஷ்ணன் பிறந்தது முதலே பல சோதனைகளை, கஷ்டங்களை எதிர்கொண்டான்.  கண்ணன் ஜனித்தது வடமதுரையில், கம்சன் எனும் கொடிய மன்னனின் சிறைச்சாலையில்.  பகவான் ஸ்ரீகிருஷ்ணன் பிறந்த அந்த புனித தருணத்தில், கடல்கள் கலக்கமடைந்தன, பூமி, மலைகள்  நடுங்கின, அணைந்த நெருப்புகள் கூட  எரியத் தொடங்கின, மங்கலக் காற்று வீசத் தொடங்கியது, பெருமழை பொழிந்து, யமுனை ஆறு வெள்ள பெருக்கு எடுத்து ஓடியது.  அந்த இரவு ஓர் அற்புத முஹூர்த்தம் - அஷ்டமி திதியுடன் கூடிய ரோஹிணி நட்சத்திரம் (இதுவே ஜெயந்தி) -  முஹூர்த்தம் விஜயமாகவும் இருந்தது. 

சிறைப்படுத்தப்பட்டு இருந்த   வசுதேவர் தேவகி தம்பதிகளுக்கு மதுரா சிறைச்சாலையில் பிறந்த எட்டாவது பிள்ளையான கண்ணனை இரவோடு இரவாக வசுதேவர் ஆதிசேஷன் குடை பிடிக்க,  யமுனை வெள்ளத்தை தாண்டி கோகுலத்தில் தலைவனான நந்தன் யசோதை தம்பதிகளிடம் மறைவாக வளர விட்டு விடுகிறார். ஒருத்தி மகனாய் பிறந்து, ஓர் இரவில் ஒருத்தி மகனாக ஒளித்து வளர்ந்த, நந்தனது அரண்மனையில் வளர்ந்த கண்ணனுக்கு நந்தகுமாரன் என்ற பெயர். 

ஸ்ரீகிருஷ்ணன் கோகுலத்தில் பசுக்களை மேய்த்து பலராமனோடு திரிந்து வளர்ந்த அந்த காலத்தில்,  தன்னை முறையாக வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே நந்தனின் கிராமத்தில் காலத்தைக் கோபாலனாகக் கழித்தான்.  அவ்வமயம்  சிறுவர்களில் மூத்தவனுக்கு ஸங்கர்ஷணன் (பலராமன்) என்றும், இளையவனுக்குக் கிருஷ்ணன் என்றும் பெயர்கள் சூட்டப்பட்டன.  கண்ணபிரான்  மனித குலத்தின் நன்மைக்காகவே உதித்தவன்.   இந்த அவதாரத்தில், பாண்டவர்களுக்காக தூது சென்றான், அர்ஜுனனுக்கு தேர் ஓட்டினான், துர்யோதனாதியர்களை மற்றும், சிசுபாலன்,  கம்சன், அரிஷ்டன், விருஷபன், கேசி, பூதனை, யானையான குவலயப்பீடன், சாணூரன், முஷ்டி, குதிரை வடிவ கேசி  ஆகியோரையும், மனித வடிவில் இருந்த இன்னும் பிற கொடியவர்களை அழித்தான்.  அவனால் பானனின் ஆயிரம் கைகள் துண்டிக்கப்படன.  

இவ்வாறு அற்புத பிறப்பு எடுத்து தர்மத்தை காத்தவன் கண்ணன் -  நந்நனுடைய செல்லப்பிள்ளையான கண்ணனை நந்தலாலா என்று அழைத்தனர்.  கருப்பு நிறம் கொண்ட  காக்கை என்பது அழகற்ற பறவை!  மனிதர்கள் அதை அவ்வளவாக விரும்புவதில்லை.   ஆனால் அகப் பார்வைக்கு அதுவும் ஆண்டவனின் அழகைக் காட்டும் ஓர் ஆடி  தானே !  பிரபஞ்ச ஆகத்தில் கரிய காகமும் ஒரு பாகம் அல்லவா?  பார்க்கும் பொருள்கள் மாறலாம். அவற்றின் நிறங்கள் மாறலாம். ஆனால் அகப்பார்வைக்கு அவை அனைத்திலும் ஆண்டவனே தெரிகிறான். ஏனெனில் நிறங்கள் பல என்றாலும் அவற்றின் ஆதாரமாய் உள்ள ஒளி ஒன்றுதான்.  மஹாகவி பாரதியார் கண்ணன் மீது மையலுடன் அற்புத பாடல்களை தந்துள்ளார்.  அதில் ஒன்று : 

 

காக்கைச் சிறகினிலே நந்தலாலா! - நின்றன்

கரியநிறம் தோன்றுதையே, நந்த லாலா!

 

பார்க்கும் மரங்கள் எல்லாம் நந்த லாலா! - நின்றன்

பச்சைநிறம் தோன்றுதையே, நந்தலாலா!

 

கேட்கும் ஒலியில் எல்லாம் நந்தலாலா! - நின்றன்

கீதம் இசைக்குதடா, நந்த லாலா!

 

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா! - நின்னைத்

தீண்டும் இன்பம் தோன்றுதடா, நந்த லாலா!

 

பார்க்கும் பொருட்கள் எல்லாவற்றிலும் கடவுளை காண்போருக்கு, காக்கையில் கூட கண்ணனே தெரிகிறான்!! - பாரதியாருக்கு காக்கையின் கரிய சிறகில் கண்ண பெருமான் நின்று சிரிக்கிறான்.  கண்ணனையே நினைக்கும் பாரதிக்கு நெருப்பு கூட சுடுவதில்லை, மாறாக கண்ணனையே உணர்கிறான்.  என்னே ஒரு உயர் பக்தி நிலை.  ஆழ்வார் பாசுரத்தில் - 'எங்கும் உளன் கண்ணன்' !!!

 


இதோ இங்கே திருவல்லிக்கேணி திரு ம.அ. நரசிம்ஹன் இல்லத்தில் உள்ள கண்ணனது மிக அழகான அற்புத சிலைகள் சில – (இரண்டாவது யானை தந்தத்திலானது.)

 


நன்றியுடன் - உங்கள் நண்பன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
10.10.2024

2 comments:

  1. very beautiful Kannan idols - Janani

    ReplyDelete
  2. Exquisite, intricate, ornate, beau Krishna - my God .... Asha

    ReplyDelete