To search this blog

Sunday, January 24, 2010

ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் ஈக்காட்டுதாங்கல் புறப்பாடு - 24/01/2010





இன்று காலை (நள்ளிரவு என்று தான் சொல்ல வேண்டும்) ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் ஈக்காட்டுதாங்கல் புறப்பாடு கண்டு அருளினார். திரு ஊறல் உத்சவம் என்று பிரசித்தி பெற்ற உத்சவம் இது, சைதாபேட்டுக்கு அருகிலுள்ள ஈக்காட்டுதாங்கல் என்ற இடத்தில பெருமாளுக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு வருடத்துக்கு ஒரு தடவையாவது பெருமாள் எழுந்து அருள வேண்டும் என்பதால் இந்த புறப்பாடு நடந்து வருகிறது.


சாதாரணமாக ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் வேறு எந்த புறப்பாடும் இல்லாத ஞாயிற்று கிழமையில் இந்த புறப்பாடு நடந்து வருகிறது. சில வருடங்களுக்கு முன்னர் பெருமாள் எழுந்து அருளும் இடத்தில ஆறு அழகான நீரோடையாக ஓடி வந்ததால் அங்கே குளிர்ந்த நீரின் நடுவே பெருமாள் புறப்பாடு கண்டு அருளி திருமஞ்சனமும் கண்டு வந்தாராம். இன்றைய கால கட்டத்தில் வெறும் புறப்பாடு மட்டுமே. நீரோடை நல்லதாக இல்லை.


இந்த சிறப்பான புறப்பாட்டின் போது எம்பெருமான் பல இடங்களில் மண்டகப்படி கண்டு அருள்வார். திருவல்லிக்கேணியில் தொடங்கி, சில மண்டகப்படி கண்டு அருளி, மயிலை பேயாழ்வாருடன் சேர்ந்து புறப்பாடு மிக சிறப்பானது.


முதலில் அல்லிக்கேணி பெரிய மாட வீதி எழுந்து அருளி, தவன உத்சவ பங்களாவில் முதல் மண்டகப்படி. அடுத்து நாங்கள் இருக்கும் விஜய் அவேன்யுவில் எழுந்து அருளி பக்தர்களுக்கு அருள் பாவித்தார்.



அடுத்து சில இடங்கள் பிறகு திரு மாதவ பெருமாள் கோயில். சித்திரை குளத்தருகில் பேயாழ்வார் பெருமாளை மங்களாசாசனம் செய்து மூன்றாம் திருவந்தாதி கோஷ்டி ஆனது.


ஆழ்வாருடன் கேசவ பெருமாள் கோயில் எழுந்து அருளினார்.




இப்படியாக மதியம் ஈக்காட்டுதாங்கல் போய் சேர்ந்து திருமஞ்சனம் கண்டு அருள்வார். அழகான பல்லக்கை தென்னசார்யா ஸ்ரீ பாதம் தாங்கிகள் உற்சாகத்துடன் ஏளப்பண்ணி வருகின்றனர்.


நடுநிசியிலும் ஏராளமான பக்தர்கள் பெருமாளுடன் கூடவே நடந்து புறப்பாட்டில் கலந்து கொண்டதையும் எம்பெருமானின் வடிவழகையும் காண கண் கோடி வேண்டும். பெருமாளை சேவிக்க வாய்ப்பு கிடைத்த பக்தர்கள் புண்ணியம் பண்ணியவர்களே !


ஆழ்வார் எம்பெருமானார் திருவடிகளே சரணம்


அடியேன் - சம்பத்குமார்.

No comments:

Post a Comment