To search this blog

Sunday, September 5, 2010

Sree Jayanthi Purappadu at Thiruvallikkeni and Uriyadi Uthsavam

மஹா விஷ்ணுவின் முக்கியமான அவதாரமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த நன்னாள் கிருஷ்ண ஜெயந்தி.தேய்பிறை எட்டாம் நாளில் ரோகிணி நட்சத்திர வேளையில் வசுதேவருக்கும் தேவகிக்கும் பூரணச் சந்திரனைப் போல இப்பூமியில் அவதரித்தார். செப்ட் 2 அன்று ஸ்ரீ ஜெயந்தி. மறு நாள் மாலை ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் புன்னை கிளை வாஹனத்தில் எழுந்து அருளினார்.


திருவல்லிக்கேணியில் உள்ள யாதவர்கள் இந்நாளில் உறியடி திருவிழாவினை சிறப்பாக கொண்டாடுவர். சில பத்திரிகைகளில் உரியடி எனவும் எழுதுகின்றனர். உரி என்ற சொல்லுக்கு தோல், கழற்று, போன்ற பொருள் உள்ளது. உறி என்றால் பண்டம் வைக்கும் பொருட்டுத் தொங்க விடும் உறி. உறி என்பது தயிர், மோர் ஆகியவற்றைப் பானைகளில் வைத்து, அப்பானைகளை அடுக்காக ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து, அவற்றை ஒரு கயிற்றில் கட்டி தொங்கவிடுவர். அதே சமயம் எங்காவது நெடுந்தூரம் பயணம் செய்வோர் அவர்களுக்குத் தேவையானவற்றை ஒரு மூட்டையாகக் கட்டி அல்லது தண்ணீர் பானை, மோர் பானை போன்றவற்றை, கயிற்றில் கட்டி, நடுவில் ஒரு தடிமனான குச்சியால் இருபுறத்துக் கயிற்றையும் இணைத்து, அந்த குச்சியைத் தோளில் வைத்து தூக்கிச் செல்வர். இதுவும் ஒரு வகையான உறிதான்.
எனவே இது உறியடி திருவிழா என்பதுவே சரி என நினைக்கிறேன்.


 நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பெரியாழ்வார் திருமொழியில் உறி பற்றி வருகிறது. - முதற்பத்து முதல்திருமொழி - வண்ணமாடங்கள் (பாடல் 4)
உறியை முற்றத்து உருட்டி நின்றாடுவார்*
நறுநெய் பால்தயிர் நன்றாகத் தூவுவார்*
செறிமென் கூந்தல் அவிழத் திளைத்து* எங்கும்
அறிவழிந்தனர் ஆய்ப்பாடியாயரே.
அடுத்த பாசுரத்தில் " கொண்டதாளுறி கோலக்கொடுமழு" என்றும் வருகிறது.


இந்த உறியடி விளையாட்டில் உயரமான கம்புகள் இடையே கிணற்றில் இருக்கும் கப்பி போன்ற அமைப்பின் வழியாக தேங்காய்க்குள் பரிசு பொருள்கள் அடங்கிய உறி ஒன்று தொங்க விடப்படுகிறது. இளைநர்கள் தங்கள் கையில் உள்ள கொம்பின் மூலம் அந்த உறியை அடித்து சாய்த்துவதுதான் போட்டி. பெரிய ட்ரம்களில் தண்ணீர் வைத்து உருளிகள் மூலம் வாகாய் சுழற்றி வேகமாய் உறியடி அடிக்க வருவோர் மீது பலர் அடிப்பார். இது சாட்டை அடி போன்று விழும். இது ஒரு வீர விளையாட்டை கருதப்படுகிறது.


சில வருடங்கள் முன்பு கோவில் வாசலில் உள்ள மண்டபத்திலும், நாகோஜி தெரு முன்பும் - தவிர பிற இடங்களிலும் உறியடி விமர்சையாக நடக்கும். தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் பல காரணங்களால் இப்போது அவ்வளவு சிறப்பாக இல்லாமல் சற்று வேகம் குறைந்தது. சமீப ஆண்டுகளில் சிங்கராச்சாரி / நாகோஜி தெருவில் நன்றாக நடக்கிறது.
நாகோஜி தெருவில் மின் விளக்கு அலங்காரத்தில் கிருஷ்ணர்


உறியடி


புன்னை வாஹனத்தில் ஸ்ரீ பார்த்தர்


திருவடியில் எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணர்.

1 comment:

  1. Uriyadi was organised inside Thavana Uthsava Bungalow also - many years back - Kutti

    ReplyDelete